சேலம்-சென்னை இடையே மீண்டும் விமான சேவை; நாளை முதல் தொடங்கப்படுகிறது


சேலம்-சென்னை இடையே மீண்டும் விமான சேவை; நாளை முதல் தொடங்கப்படுகிறது
x
தினத்தந்தி 26 May 2020 3:47 AM GMT (Updated: 26 May 2020 3:47 AM GMT)

சேலம்-சென்னை இடையே நாளை (புதன்கிழமை) முதல் மீண்டும் விமான சேவை தொடங்கப்பட உள்ளது.

ஓமலூர்,

சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு விமான போக்குவரத்து நடைபெற்று வந்தது. தினமும் காலை 11.40 மணிக்கு சென்னையில் இருந்து சேலத்துக்கு விமானம் வரும். பின்னர் 12.15 மணிக்கு சேலத்தில் இருந்து சென்னைக்கு அந்த விமானம் புறப்பட்டு செல்லும். இந்த விமானம் மூலம் ஏராளமான பயணிகள் பயன் அடைந்து வந்தனர்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது ஊரடங்கு வருகிற 31-ந் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சேலம்-சென்னை இடையே கடந்த மார்ச் மாதம் முதல் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே ஊரடங்கில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகிறது.

இதையொட்டி தற்போது உள்நாட்டு விமான சேவையை தொடங்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து சேலம்-சென்னை இடையே நாளை (புதன்கிழமை) முதல் மீண்டும் விமான சேவை தொடங்கப்பட உள்ளது. 2 மாதத்துக்கு பிறகு விமான சேவை தொடங்க உள்ள நிலையில் தற்போது விமானம் புறப்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி சென்னையில் இருந்து காலை 7.25 மணிக்கு விமானம் புறப்பட்டு, 8.25 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர் காலை 8.55 மணிக்கு அந்த விமானம் சேலத்தில் இருந்து புறப்பட்டு, 9.50 மணிக்கு சென்னையை சென்றடையும். தற்போது இந்த விமான சேவை தொடங்க உள்ளதால், சேலம் விமான நிலையத்தை தூய்மைப்படுத்தும் பணி, கிருமி நாசினி தெளிக்கும் பணி உள்பட பல்வேறு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மேலும் விமான நிலையத்தில் அரசு உத்தரவுப்படி பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது. இதற்காக தனி அறை அமைக்கப்பட்டுள்ளது. பரிசோதனையில் கொரோனா அறிகுறி இருக்கும் பயணிகளை தனிமைப்படுத்தும் வகையில், ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும் வகையில் ஆம்புலன்ஸ் வசதியும் செய்யப்பட்டு இருக்கிறது. பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் கட்டங்களும் வரையப்பட்டுள்ளன.

மேலும் அங்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி நேற்று மாவட்ட கலெக்டர் ராமன் சேலம் காமலாபுரம் விமான நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். விமான சேவை தொடங்குவதையொட்டி செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அதிகாரி திவாகர், விமான நிலைய இயக்குனர் வெங்கடாசலபதி உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story