விலை உயர்வால் மது பானங்களை புறக்கணித்து சாராயக்கடைகளுக்கு மது பிரியர்கள் படையெடுப்பு


விலை உயர்வால் மது பானங்களை புறக்கணித்து சாராயக்கடைகளுக்கு மது பிரியர்கள் படையெடுப்பு
x
தினத்தந்தி 26 May 2020 11:36 PM GMT (Updated: 26 May 2020 11:36 PM GMT)

கடுமையாக விலை உயர்த்தப்பட்டுள்ளதால் புதுச்சேரியில் மது பானங்களை புறக்கணித்து சாராயக்கடைகளை நோக்கி மது பிரியர்கள் படையெடுத்தனர். இதனால் சாராயம் விற்பனை அமோகமாக நடந்தது.

புதுச்சேரி,

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பஸ், ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதுதவிர மார்க்கெட், திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள், கடைகள், ஓட்டல்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் அனைத்தும் மூடப்பட்டன. நாடு முழுவதும் வரும் 31-ந்தேதி வரை 4-ம் கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரியிலும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் சில நிபந்தனைகளுடன் பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு கடைகள், ஓட்டல்கள் திறக்கப்பட்டன. சமூக இடைவெளியுடன் உள்ளூர் பஸ் போக்குவரத்தும் தொடங்கியது. ஆனால் பஸ்களில் மக்களின் கூட்டத்தை காண முடியவில்லை.

கடந்த சில நாட்களுக்கு முன் தமிழ்நாட்டில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இதையடுத்து புதுவையிலும் மதுக்கடைகளை திறக்க அரசு முடிவு செய்து கோவிட் வரி விதிக்கப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அதிக அளவில் கொரோனா பாதிப்புள்ள விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் இருந்து மது குடிப்பதற்காக வருவார்கள் என்பதால் அதை தவிர்க்க தமிழகத்தைப் போல் மது வகைகளின் விலையை உயர்த்துமாறு அரசை கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தினார்.

இந்த பிரச்சினையால் நீண்ட இழுபறிக்குப் பின் நேற்று முன்தினம் புதுச்சேரி, காரைக்காலில் மதுக்கடைகள், சாராயக்கடைகள், கள்ளுக்கடைகள் திறக்கப்பட்டன. மாகி, ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் கோவிட் வரி முடிவுக்கு வராததால் அங்கு மதுக்கடைகள் திறக்கப்படவில்லை. மதுக்கடைகள் திறக்கப்பட்டதும் புதுச்சேரியில் மது பிரியர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர்.

ஆனால் தமிழகத்தை விட மது பானங்களின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டன. அதாவது கடந்த காலங்களில் ரூ.40-க்கு விற்ற குவார்ட்டர் மது பாட்டில் தற்போது ரூ.120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் பீர்பாட்டில் ரூ.100-ல் இருந்து ரூ.200 -ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் சாராயத்துக்கும் 20 சதவீத கோவிட் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் முன்பு ரூ.30க்கு விற்ற குவார்ட்டர் சாராயம் ரூ.40 ஆக விலை உயர்ந்துள்ளது. வேலை எதுவும் இல்லாமல் வருமானத்தை இழந்து நிற்கும் இந்த நேரத்தில் தமிழகத்தை விட மது பானங்களின் விலை அதிகமாக இருப்பது குறித்து மது பிரியர்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.

இதையடுத்து மது வகைகளின் விலையை விட சாராயத்தின் விலை குறைவாக இருப்பதால் சாராயக்கடைகளை நோக்கி அவர்கள் படையெடுத்தனர். மேட்டுப்பாளையம் உள்பட பல கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கும்பலாக குவிந்து இருந்தனர். நீண்ட வரிசையில் நின்று சாராயம் வாங்கி குடித்தனர். இதனால் நேற்று சாராயக்கடைகளில் வியாபாரம் அமோகமாக இருந்தது. சாராயக்கடைகளில் கேன்களில் வைத்து சில்லரைக்கு சாராயம் விற்கப்பட்டது. ஆனால் தரம் கருதி அதை விரும்பாமல் குவார்ட்டர் அளவுள்ள சாராய பாட்டில்களையே விரும்பி வாங்கினர். பாட்டிலை திருப்பித் தருவோருக்கு மட்டுமே அவை வழங்கப்பட்டன. பாட்டிலுடன் சாராயத்தை எடுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை.

வில்லியனூர் அருகே ஆரியப்பாளையத்தில் உள்ள சாராய வடி ஆலையில் புதிய பாட்டில்கள் இருப்பு இல்லை. இதனால் பழைய பாட்டில்களிலேயே மீண்டும் சாராயத்தை அடைக்க வேண்டி இருப்பதால் சாராயக்கடைகளில் இந்த கட்டுப்பாடு தெரிவிக்கப்பட்டது. சாராய வியாபாரம் தற்போது அதிகரித்து இருப்பதையொட்டி இன்று (புதன்கிழமை) முதல் சாராய ஆலையை இயக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். கடுமையாக விலை உயர்த்தப்பட்டுள்ளதையொட்டி மது வகைகளை புறக்கணித்து மது பிரியர்கள் சாராயக்கடைகளை நோக்கி திரும்பி உள்ளதால் நலிவடைந்து இருந்த சாராய விற்பனை தற்போது சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.

Next Story