தூத்துக்குடியில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கியது - கலெக்டர் சந்தீப் நந்தூரி நேரில் ஆய்வு


தூத்துக்குடியில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கியது - கலெக்டர் சந்தீப் நந்தூரி நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 27 May 2020 11:15 PM GMT (Updated: 27 May 2020 6:58 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கியது. இதனை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணிகள் 6 மையங்களில் நேற்று தொடங்கியது. தூத்துக்குடி சுப்பையா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, சக்தி விநாயகர் மேல்நிலைப்பள்ளி, ஏ.பி.சி.வி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய துணை விடைத்தாள் திருத்தும் மையங்களில் நடந்த பணிகளை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் முககவசங்கள் அணிந்து, சமூக இடைவெளி பின்பற்றி பணியாற்றுகிறார்களா? என்பதையும், விடைத்தாள் திருத்தும் மையங்களின் நுழைவுவாயிலில் வைக்கப்பட்டுள்ள சானிடைசர் மற்றும் கை கழுவும் இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது, உதவி கலெக்டர்(பயிற்சி) பிரித்திவி ராஜ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

பின்னர் கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களிடம் கூறியதாவது:-

சிறப்பு பஸ்கள் இயக்கம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கி உள்ளது. வருகிற 9-ந் தேதி வரை நடக்கிறது. மாவட்டத்தில் 6 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. விடைத்தாள் திருத்தும் மையங்களில் கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்தப்பட்டது. விடைத்தாள் திருத்தும் பணிகளில் 1,344 ஆசிரியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

இவர்கள் விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு வந்து பணியில் ஈடுபட ஏதுவாக 11 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் முககவசங்கள் அணிந்து, சமூக இடைவெளி பின்பற்றி பணியாற்ற வேண்டும்.

தமிழக அரசு தெரிவித்துள்ளபடி, விடைத்தாள் திருத்தும் மையங்களின் நுழைவுவாயிலில் சானிடைசர் மற்றும் கை கழுவும் இடம் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் அனைத்து ஆசிரியர்களும் சுத்தமாக கை கழுவி பணியில் ஈடுபட ஏற்கனவே அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தில் முதன்மை மற்றும் துணை விடைத்தாள் திருத்தும் மையங்களில் 1,32,518 விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட உள்ளன. இவ்வாறு மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.

Next Story