பர்கூர் ஒன்றியத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 24 ஏரிகள் தூர்வாரும் பணி


பர்கூர் ஒன்றியத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 24 ஏரிகள் தூர்வாரும் பணி
x
தினத்தந்தி 28 May 2020 1:26 AM GMT (Updated: 28 May 2020 1:26 AM GMT)

பர்கூர் ஒன்றியத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 24 ஏரிகள் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை கலெக்டர் பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பர்கூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஊராட்சி ஒன்றியம் காட்டாகரம் ஊராட்சி சென்னையன் கொட்டாய் ஏரி ரூ.3.14 லட்சம் மதிப்பிலும், ஆலமரத்து கொட்டாய் ஏரி ரூ.2.37 லட்சம் மதிப்பலும் மற்றும் பக்கிரி கொட்டாய் ஏரி ரூ.5 லட்சம் மதிப்பிலும் கரை பலப்படுத்தல், ஆழப்படுத்துதல், நீர் வெளியேறுவதற்கான தடுப்பு அமைத்தல் மற்றும் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து பாரத பிரதான் மந்திரி ஆவாஸ்யோஜனா வீடு வழங்கும் திட்டம் மற்றும் பசுமை வீடு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகள் கட்டும் பணிகளை கலெக்டர் பார்வையிட்டார். தொடர்ந்து பட்டலப்பள்ளி ஊராட்சியில் ஒருங்கிணைந்த நிதி வருவாய் திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.

அப்போது கலெக்டர் கூறுகையில், குடிமராமத்து திட்டத்தின் கீழ், பர்கூர் ஊராட்சி ஒன்றியத்தில் 2020-2021-ம் நிதியாண்டில் 24 ஏரிகள் ரூ.87 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பில் தூர்வார தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. மழை காலம் தொடங்கும் முன்பு ஏரிகள் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணி, ஞானபிரகாசம், உதவி பொறியாளர் மார்க்ஸ், பணி மேற்பார்வையாளர் கவிதா ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story