குடும்ப பிரச்சினையில் பெண் தற்கொலை அதிர்ச்சியில் கணவரும் உயிரை மாய்த்துக் கொண்டார்


குடும்ப பிரச்சினையில் பெண் தற்கொலை அதிர்ச்சியில் கணவரும் உயிரை மாய்த்துக் கொண்டார்
x
தினத்தந்தி 28 May 2020 6:13 AM GMT (Updated: 28 May 2020 6:13 AM GMT)

வேப்பந்தட்டை அருகே குடும்ப பிரச்சினையில் பெண் தற்கொலை செய்து கொண்டார். அதிர்ச்சியில் அவரது கணவரும் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் கொண்டார்.

வேப்பந்தட்டை, 

வேப்பந்தட்டை அருகே குடும்ப பிரச்சினையில் பெண் தற்கொலை செய்து கொண்டார். அதிர்ச்சியில் அவரது கணவரும் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் கொண்டார்.

கணவன்-மனைவி தற்கொலை

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே உள்ள காரியானூரை சேர்ந்தவர் செல்லமுத்து. இவரது மகள் சத்யாதேவி(வயது 23). இவருக்கும், அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா, நல்லாம்பாளையத்தை சேர்ந்த ராமலிங்கம் மகன் கணேசன் (26) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 5 மாத ஆண் குழந்தை உள்ளது. பிரசவத்திற்காக பெற்றோர் வீட்டுக்கு சென்ற சத்யாதேவி, குழந்தை பிறந்ததிலிருந்து அங்கேயே தங்கியிருந்தார்.

இந்தநிலையில், மனைவி மற்றும் குழந்தையை தனது சொந்த ஊருக்கு அழைத்து வருவதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு காரியானூர் கிராமத்திற்கு கணேசன் வந்தார். அப்போது கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வாக்குவாதம் நடந்துள்ளது. இதில் மனமுடைந்த சத்யாதேவி தனது வீட்டின் அறைக்குள் சென்று, மின்விசிறியில் புடவையால் தூக்குப்போட்டு தொங்கியுள்ளார். உடனே, உறவினர்கள் கதவை உடைத்து சத்யாதேவியை மீட்டு அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மனைவி இறந்த தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்த கணேசன் அதே வீட்டில் மற்றொரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

5 மாத குழந்தை தவிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த கைகளத்தூர் போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்து 5 மாதமே ஆன குழந்தையை தவிக்க விட்டு, பெற்றோர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story