உடுமலையில் இருந்து இதுவரை 850 பேர் வடமாநிலங்களுக்கு சென்றனர்


உடுமலையில் இருந்து இதுவரை   850 பேர் வடமாநிலங்களுக்கு சென்றனர்
x
தினத்தந்தி 28 May 2020 10:09 PM GMT (Updated: 28 May 2020 10:09 PM GMT)

உடுமலையில் இருந்து இதுவரை 850 பேர் வட மாநிலங்களுக்கு திரும்பி சென்றுள்ளனர்.

உடுமலை,

வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பலர் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளதால் பல தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டது.இதனால் தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணியாற்றி வந்த வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் சில கட்டுப்பாடுகளுடன் தொழிற்சாலைகள் இயங்க அரசு தளர்வுகளை அறிவித்துள்ளபோதும் வட மாநிலங்களைப் சேர்ந்த பெரும்பாலான தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி சென்ற வண்ணம் உள்ளனர்.

850 பேர் சென்றனர்

அதே போன்று உடுமலை தாலுகாவில் பல்வேறு தொழிற்சாலைகளில் பணியாற்றி வந்த வடமாநில தொழிலாளர்களும் சொந்த ஊர்களுக்கு திரும்பிசென்றபடி உள்ளனர். தொழிற்சாலைகளில் பணியாற்றி வந்த சிலர் தனி பஸ்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். சிலர் பஸ் மூலம் திருப்பூருக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து ரெயில் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று உடுமலையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 98 பேர் ரெயிலில் செல்வதற்காக, உடுமலையில் இருந்து 2 தனியார் பஸ்களில் திருப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களை உடுமலை தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமார்,நில வருவாய் ஆய்வாளர் ரஞ்சித் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர். உடுமலையில் இருந்து அசாம்,மேற்குவங்காளம்,ஒடிசா, பீகார்,இமாசலப்பிரதேசம், அரியானா ஆகிய மாநிலங்களுக்கு இதுவரை மொத்தம் 850 பேர் சென்றுள்ளனர்.

Next Story