சமையல் எண்ணெய் சில்லரை விற்பனைக்கு மேலும் ஒரு ஆண்டிற்கு அனுமதி உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை


சமையல் எண்ணெய் சில்லரை விற்பனைக்கு மேலும் ஒரு ஆண்டிற்கு அனுமதி உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை
x
தினத்தந்தி 29 May 2020 3:52 AM GMT (Updated: 29 May 2020 3:52 AM GMT)

பொதுமக்கள் பயன்படுத்தும் சமையல் எண்ணெய் சில்லரை விற்பனைக்கு மேலும் ஒரு ஆண்டிற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

மதுரை,

தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரசால் அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக முடங்கிய தொழில்கள் பாதுகாக்கப்பட்டு தற்போது மீண்டும் புத்துயிர் பெற்று வருகிறது. பொதுமக்கள் பயன்படுத்தும் சமையல் எண்ணெயை சில்லரை விற்பனைக்கு வருகிற 1- ந் தேதி முதல் அனுமதி இல்லை என அரசு முடிவு எடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பினால் மத்திய, மாநில அரசுகள் பல சட்டங்களை ஒத்திவைத்தும், வரி வருவாயை விட்டுக்கொடுத்தும் வருகிறது. இந்தியாவில் அனைத்து மாநிலத்திலும் சில்லரை விற்பனை தொடர்ந்து அனுமதிக்கப்பட்டு வருகிறது. அதேபோன்று மாநில அரசு மக்களின் பொதுநலன் கருதி சமையல் எண்ணெய் சில்லரை விற்பனைக்கு மேலும் ஒரு ஆண்டுக்கு விற்க அனுமதிக்கலாம். தற்போது கொரோனா பாதிப்பால் 30 சதவீதம் வணிகம் மட்டுமே நடைபெறுகிறது. எனவே லட்சக்கணக்கான சில்லரை வணிகர்களின் நலன் கருதி அடுத்தாண்டு மே மாதம் முதல் இந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

வேளாண் பொருள்

அதேபோன்று பல ஆண்டுகளாக விவசாய விளை பொருட்களை வாங்கி வணிகம் செய்யும் வணிகர்கள், தயாரிப்பாளர்களுக்கு நன்மை அளிக்காத வேளாண் விளைபொருள் விற்பனை(ஒழுங்குப்படுத்துதல்) சட்டம் 1987-ல் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய உணவு பொருள் வியாபாரிகள் சங்கம் முயற்சி செய்து வருகிறது. எனவே அந்த சட்டத்தில் சில மாற்றங்கள் செய்து, அதில் உள்ள சில விதிகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும். ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெறும் விற்பனையை மட்டுமே அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். விற்பனை கூடத்திற்கு வெளியே நடைபெறும் வணிகத்திற்கு எந்த கட்டணமும் வசூலிக்க கூடாது. எங்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story