கத்திரி வெயில் விடைபெற்றது மதுரையில் இடி-மின்னலுடன் கன மழை 4 மணி நேர மின்தடையால் மக்கள் அவதி


கத்திரி வெயில் விடைபெற்றது  மதுரையில் இடி-மின்னலுடன் கன மழை  4 மணி நேர மின்தடையால் மக்கள் அவதி
x
தினத்தந்தி 29 May 2020 4:52 AM GMT (Updated: 29 May 2020 4:52 AM GMT)

மதுரையில் இடி-மின்னலுடன் கன மழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக 4 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது.

மதுரை,

தமிழகத்தில் அக்னிநட்சத்திரம் என்று சொல்லப்படும் கத்திரி வெயிலின் போது வெயிலின் உக்கிரம் அதிகமாக இருக்கும். அதன்படி கடந்த 4-ந் தேதி தொடங்கிய கத்திரி வெயில் நேற்றுடன் முடிவடைந்தது. பொதுவாக கத்திரி வெயிலின் போது ஏற்படும் வெப்ப சலனம் காரணமாக அடிக்கடி கோடை மழை பெய்யும்.

ஆனால் இந்த ஆண்டு மதுரையில் கோடை மழை பெய்யவில்லை. மாறாக 105 டிகிரி வரை வெயிலின் தாக்கம் இருந்தது. காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை வெப்பம் வாட்டி வதைத்தது. கடுமையான அனல் காற்று வீசியது. இந்த நிலையில் கத்திரி வெயிலின் இறுதி நாளான நேற்று மதுரையில் கோடை மழை இடிமின்னலுடன் கொட்டி தீர்த்தது.

மின் தடை

நேற்று காலையில் வழக்கம் போல் மதுரையில் கோடை வெப்பம் சுட்டெரித்தது. சாலைகளில் அனல் காற்று வீசியது. ஆனால் நேரம் செல்ல செல்ல கருமேகங்கள் சூழ்ந்தன. மாலை 4 மணிக்கு மதுரை நகரின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரத்தில் பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதன் காரணமாக நகரின் அனைத்து பகுதிகளிலும் மின்சார நிறுத்தம் செய்யப்பட்டது. இரவு 8 மணி வரை விட்டுவிட்டு மழை பெய்தது. அதன்பின்பும் லேசான சாரல் மழை இருந்தது.

இந்த மழையால் நகரில் உள்ள சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பெரியார் பஸ் நிலையம், ரெயில் நிலையங்களில் மழை நீர் குளம் போல் தேங்கி நின்றது. மின் தடை ஏற்பட்ட காரணத்தால் கோரிப்பாளையம் உள்பட முக்கிய இடங்களில் போக்குவரத்து சிக்னல்கள் வேலை செய்யவில்லை. இதன்காரணமாக போலீசார் மழையில் நனைந்தப்படி போக்குவரத்தை சீர் செய்தனர். காளவாசல், தெற்குவாசல், பெரியார் பஸ் நிலையம், காமராஜர் சாலை, கீழமாசி வீதி, தெற்கு மாசி வீதிகளில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. சாலைகளில் மழை நீர் தேங்கி நின்றதால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

மரங்கள் சாய்ந்தன

மழையால் ஏற்பட்ட மின் தடை சுமார் 4 மணி நேரம் கழித்து இரவு 8.30 மணிக்கு தான் வந்தது. இந்த நேரத்தில் தெரு விளக்குகளும் எரியவில்லை. அதனால் ஒட்டுமொத்த மதுரை நகரமே இருளில் மூழ்கி கிடந்தது. இதனால் மக்கள் அவதி அடைந்தனர். மழை காரணமாக பைபாஸ் சாலை பொன்மேனி உள்பட நகரின் சில இடங்களில் மரங்கள் கீழே சாய்ந்தன. மதிச்சியத்தில் ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.

கத்திரி வெயில் நேற்றுடன் விடைப்பெற்றதால் மதுரையில் வெப்பத்தின் தாக்கம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story