கோவில்பட்டி அருகே பரிதாபம் - தண்ணீர் என நினைத்து கிருமிநாசினி குடித்த தொழிலாளி சாவு


கோவில்பட்டி அருகே பரிதாபம் - தண்ணீர் என நினைத்து கிருமிநாசினி குடித்த தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 29 May 2020 10:30 PM GMT (Updated: 29 May 2020 7:18 PM GMT)

கோவில்பட்டி அருகே தண்ணீர் என நினைத்து, கிருமிநாசினியை குடித்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவில்பட்டி, 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வசந்தநகரைச் சேர்ந்தவர் பண்டாரம் மகன் மகாராஜன் (வயது 42). கட்டிட தொழிலாளியான இவர் கோவில்பட்டியை அடுத்த செண்பகபேரியில் உள்ள கோழிப்பண்ணையில் கட்டிட பணிக்கு அவ்வப்போது சென்று வந்தார்.

இந்த நிலையில் மகாராஜன் நேற்று அந்த கோழிப்பண்ணைக்கு சென்றார். அங்கு கோழிப்பண்ணையில் தெளிப்பதற்காக கிருமிநாசினியை பாட்டிலில் வைத்து இருந்தனர். அதனை தண்ணீர் என நினைத்து மகாராஜன் குடித்து விட்டார்.

இதனால் மயங்கி விழுந்து உயிருக்கு போராடிய மகாராஜனை சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே மகாராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், நாலாட்டின்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தண்ணீர் என நினைத்து கிருமிநாசினியை குடித்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story