கடலூரில் துணிகர சம்பவம் ஓய்வுபெற்ற துணை போலீஸ் சூப்பிரண்டு மனைவியிடம் 8 பவுன் நகை பறிப்பு மர்மநபர்களுக்கு வலைவீச்சு


கடலூரில் துணிகர சம்பவம் ஓய்வுபெற்ற துணை போலீஸ் சூப்பிரண்டு மனைவியிடம் 8 பவுன் நகை பறிப்பு மர்மநபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 31 May 2020 3:46 AM GMT (Updated: 31 May 2020 3:46 AM GMT)

கடலூரில் ஓய்வுபெற்ற துணை போலீஸ் சூப்பிரண்டு மனைவியிடம் 8 பவுன் நகையை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கடலூர், 

கடலூரில் ஓய்வுபெற்ற துணை போலீஸ் சூப்பிரண்டு மனைவியிடம் 8 பவுன் நகையை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

துணை போலீஸ் சூப்பிரண்டு மனைவி

கடலூர் கோண்டூரை சேர்ந்தவர் கஜேந்திரபாபு. இவர் காவல்துறை டெக்னிக்கல் பிரிவில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 64). இவர் நேற்று காலை கடலூர் வி.ஐ.பி.நகரில் வசித்து வரும் தனது மகள் வீட்டுக்கு நடந்து சென்றார். அங்கு அவர் தனது மகளை பார்த்து விட்டு, மீண்டும் மாலையில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அவரது மகள் வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் வந்த போது, மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த மர்மநபர்கள் 2 பேர் திடீரென ஜெயலட்சுமியை வழிமறித்தனர்.

8 பவுன் நகை பறிப்பு

இதில் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட முயன்றார். அதற்குள் மர்மநபர்கள் 2 பேரும், ஜெயலட்சுமியின் கழுத்தில் கிடந்த 8 பவுன் நகையை பறித்துக் கொண்டு தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் ஏறினர். இதில் பதறிய அவர் திருடன் திருடன் என கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் மர்மநபர்கள் 2 பேரும் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச்சென்று விட்டனர். பறிபோன நகையின் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. மர்மநபர்கள் நகையை பறித்ததில் ஜெயலட்சுமியின் கழுத்தில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் கடலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இது குறித்த புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்துச் சென்ற மர்மநபர்கள் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதோடு, அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். ஓய்வுபெற்ற துணை போலீஸ் சூப்பிரண்டு மனைவியிடம் பட்டப்பகலில் மர்மநபர்கள் நகையை பறித்துச்சென்ற சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story