பவானி ஆற்றில் மூழ்கி அண்ணன்-தம்பி பலி; அந்தியூர் அருகே பரிதாபம்


பவானி ஆற்றில் மூழ்கி அண்ணன்-தம்பி பலி; அந்தியூர் அருகே பரிதாபம்
x
தினத்தந்தி 31 May 2020 11:16 PM GMT (Updated: 31 May 2020 11:16 PM GMT)

அந்தியூர் அருகே தந்தை கண் முன்னே நீச்சல் பழகியபோது பவானி ஆற்றில் மூழ்கி அண்ணன், தம்பி பலியானார்கள். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

அந்தியூர்,

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள புதுப்பாளையம் எரங்காட்டு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன். அவருடைய மனைவி ஈஸ்வரி. இவர்களுக்கு கணேஷ் (வயது 22), சிவராஜ் (18) என்ற 2 மகன்கள் இருந்தனர். இதில் கணேஷ் பி.காம் பட்டப் படிப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். சிவராஜ் சித்தோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வந்தார். கொரோனா ஊரடங்கால் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் சிவராஜும் வீட்டில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் மகன்கள் 2 பேருக்கும் நீச்சல் கற்றுக்கொடுக்க தந்தை தமிழ்செல்வன் முடிவு செய்தார். இதனால் அவர்கள் 2 பேரையும் ஆப்பக்கூடல் கீழ்வானி மாரியம்மன் கோவில் அருகே செல்லும் பவானி ஆற்றுக்கு நேற்று மாலை அழைத்து சென்றார்.

அதன்பின்னர் தமிழ்செல்வன் கரையில் நின்றபடி ஆலோசனை சொல்ல கணேசும், சிவராஜூம் ஆற்றில் இறங்கி நீச்சல் கற்றுக்கொண்டு இருந்தார்கள். அப்போது கணேஷ் தெரியாமல் ஆழமான பகுதிக்கு சென்றார். இதனால் அவர் தண்ணீரில் மூழ்க தொடங்கினார். இதை பார்த்த சிவராஜ் அவரை காப்பாற்ற சென்றார். அப்போது அவரும் தண்ணீரில் மூழ்கினார்.

மகன்கள் தண்ணீரில் மூழ்குவதை பார்த்த தமிழ்செல்வன் பதறிப்போய் ஆற்றில் குதித்து 2 பேரையும் காப்பாற்ற முயன்றார். ஆனால் முடியவில்லை. அருகே குளித்துக்கொண்டு இருந்தவர்களும் ஓடிவந்து தண்ணீரில் மூழ்கி கணேசையும், சிவராஜையும் தேடினார்கள். சிறிது நேரத்துக்கு பிறகு 2 பேரும் பிணமாக மீட்கப்பட்டனர். மகன்களின் உடல்களை பார்த்து தமிழ்செல்வன் கதறித்துடித்தார்.

பின்னர் இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீச்சல் பழகியபோது தந்தை கண்முன்னே 2 வாலிபர்கள் மூழ்கி பலியானது அந்தியூர் புதுப்பாளையம் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

Related Tags :
Next Story