புதிதாக 2,361 பேருக்கு தொற்று உறுதி மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு 70 ஆயிரத்தை தாண்டியது


புதிதாக 2,361 பேருக்கு தொற்று உறுதி மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு 70 ஆயிரத்தை தாண்டியது
x
தினத்தந்தி 2 Jun 2020 1:04 AM GMT (Updated: 2 Jun 2020 1:04 AM GMT)

மராட்டியத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 70 ஆயிரத்தை தாண்டியது. நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 361 பேருக்கு தொற்று உறுதியானது.

மும்பை,

மராட்டியத்தில் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் அதிதீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக தலைநகர் மும்பையில் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இந்தநிலையில் நேற்று மட்டும் புதிதாக 2 ஆயிரத்து 361 பேருக்கு நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இதனால் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்து 13 ஆக உயர்ந்து உள்ளது.

இதேபோல மாநிலத்தில் மேலும் 76 பேர் வைரஸ் நோய்க்கு உயிரிழந்து உள்ளனர். இதனால் பலியானவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 362 ஆக அதிகரித்து உள்ளது. இதேபோல நேற்று மட்டும் மாநிலம் முழுவதும் 779 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமாகி உள்ளனர். இதுவரை மொத்தம் 30 ஆயிரத்து 108 பேர் நோய் பாதிப்பில் இருந்து மீண்டு உள்ளனர்.

மராட்டியத்தில் நோய் பாதிப்பில் இருந்து குணமானவர்களின் சதவீதம் உயர்ந்து வருகிறது. கடந்த மார்ச் 9-ந் தேதி தான் மாநிலத்தில் முதல் கொரோனா நோயாளி கண்டறியப்பட்டார். அந்த மாதம் மொத்தம் 302 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். 39 பேர் குணமடைந்தனர். மார்ச் மாதம் குணமடைந்தவர்கள் சதவீதம் 12.91 ஆகும்.

ஏப்ரல் மாதம் வரை மாநிலத்தில் நோய் பாதிக்கப்பட்ட 10 ஆயிரத்து 498 பேரில் 1,773 பேர் குணமடைந்தனர். அந்த மாதம் 16.88 சதவீதம் நோய் பாதித்தவர்கள் குணமாகி இருந்தனர். கடந்த (மே) மாதத்தில் மாநிலத்தில் 67 ஆயிரத்து 655 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் 29 ஆயிரத்து 329 பேர் குணமாகி உள்ளனர். அதாவது மே மாதத்தில் மராட்டியத்தில் 43.35 சதவீதம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமாகி இருக்கிறார்கள்.

மும்பையை பொறுத்தவரை நேற்று புதிதாக 1,413 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் நகரில் நோய் பாதித்தவர்கள் எண்ணிக்ைக 41 ஆயிரத்து 99 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் 40 பேர் பலியாகினர். இதனால் மும்பையில் ஆட்கொல்லி நோய்க்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,319 ஆக உயர்ந்து உள்ளது.

மராட்டியத்தில் மற்ற பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் விவரம் மற்றும் அடைப்புகுறிக்குள் பலியானவர்கள் விவரம் வருமாறு:-

தானே மாநகராட்சி- 3,902 (83 பேர் பலி), தானே புறநகர் - 752 (7), நவிமும்பை மாநகராட்சி - 2,729 (67), கல்யாண் டோம்பிவிலி மாநகராட்சி - 1,333 (27), உல்லாஸ் நகர் மாநகராட்சி - 356 (6), பிவண்டி மாநகராட்சி - 154 (6), மிரா பயந்தர் மாநகராட்சி - 715 (20), வசாய் விரார் மாநகராட்சி - 919 (30), ராய்காட் - 632 (20),

பன்வெல் மாநகராட்சி - 516 (21). மாலேகாவ் மாநகராட்சி - 761 (58). புனே மாநகராட்சி - 7,020 (316), பிம்பிரி சின்ஞ்வட் மாநகராட்சி - 472 (10), சோலாப்பூர் மாநகராட்சி - 880 (67), அவுரங்காபாத் மாநகராட்சி - 1,505 (67), நாக்பூர் மாநகராட்சி - 557 (11).

Next Story