68 நாட்களுக்கு பிறகு இயல்புநிலை திரும்புகிறது: நெல்லை, தூத்துக்குடி-தென்காசியில் பஸ்கள் ஓடத்தொடங்கின


68 நாட்களுக்கு பிறகு இயல்புநிலை திரும்புகிறது: நெல்லை, தூத்துக்குடி-தென்காசியில் பஸ்கள் ஓடத்தொடங்கின
x
தினத்தந்தி 2 Jun 2020 2:36 AM GMT (Updated: 2 Jun 2020 2:36 AM GMT)

கொரோனா ஊரடங்கில் மேலும் தளர்வாக 68 நாட்களுக்கு பிறகு நேற்று நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் பஸ்கள் ஓடத்தொடங்கின. இதனால் இயல்புநிலை திரும்புகிறது.

நெல்லை,

கொரோனா ஊரடங்கில் மேலும் தளர்வாக 68 நாட்களுக்கு பிறகு நேற்று நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் பஸ்கள் ஓடத்தொடங்கின. இதனால் இயல்புநிலை திரும்புகிறது. எனினும் பெரும்பாலான பஸ்களில் குறைவான பயணிகளே பயணம் செய்தனர்.

கொரோனா ஊரடங்கு

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதையொட்டி பஸ், ரெயில், விமான போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டது. பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். அவசர தேவைக்காக ஒரு இடத்தில் இருந்து, மற்றொரு இடத்திற்கு இ-பாஸ் மூலம் வாகனங்களில் சென்று வந்தனர்.

கடந்த மாதம் 4-ந்தேதி பிறப்பிக்கப்பட்ட 3-வது கட்ட ஊரடங்கில் சில தளர்வுகளையும், 18-ந்தேதி பிறப்பிக்கப்பட்ட 4-வது கட்ட ஊரடங்கில் மேலும் பல தளர்வுகளையும் அரசு அறிவித்தது. அதன்படி பெரும்பாலான கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அரசு அலுவலகங்கள் திறக்கப்பட்டன. ஆனால், பொது போக்குவரத்துக்கு மட்டும் தடை நீட்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர்.

பஸ் போக்குவரத்துக்கு அனுமதி

இந்த நிலையில் 5-வது கட்ட ஊரடங்கு வருகிற 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் இதில் பொது போக்குவரத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது. பஸ் போக்குவரத்துக்காக தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள், 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டது. மண்டலங்களுக்குள் அரசு பஸ்கள் இயக்கப்படும். அதுவும் 50 சதவீத பஸ்கள், 60 சதவீத பயணிகளுடன் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதையொட்டி நெல்லை மண்டலத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் நேற்று முன்தினம் அனைத்து பஸ்களும் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டது.

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் உள்ளடங்கிய தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் நெல்லை கோட்டத்தின் சார்பில், மொத்தம் 900 பஸ்கள் உள்ளன. இதில் 450 பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மட்டும் 350 அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. இதில் 150 நகர பஸ்களும், 200 புறநகர் பஸ்களும் அடங்கும்.

பஸ்கள் ஓடியது

நேற்று அதிகாலை 5 மணிக்கு அனைத்து பணிமனைகளில் இருந்தும் பஸ்கள் புறப்பட்டன. நெல்லை புதிய பஸ்நிலையத்தில் இருந்து அதிகாலை 5.30 மணிக்கு தென்காசி, கோவில்பட்டி, தூத்துக்குடி, அம்பை, பாபநாசம், திருச்செந்தூர், உடன்குடி, திசையன்விளை, வள்ளியூர் ஆகிய ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. பஸ்சில் ஏறிய அனைத்து பயணிகளுக்கும் தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தமாக கழுவிய பின்னரே பஸ்களில் பயணம் செய்ய அனுமதித்தனர்.

டிரைவர்கள், கண்டக்டர் கள் முக கவசம், கையுறை அணிந்து இருந்தனர். இதேபோல் பயணிகளும் முக கவசம் அணிந்திருந்தனர். பஸ்சில் சமூக இடைவெளியுடன் பயணிகள் அமர வைக்கப்பட்டனர். இதனால் குறைந்த பயணிகளுடன் பஸ்கள் இயக்கப்பட்டன. சில பஸ்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

நெல்லை புதிய பஸ் நிலையம், பொருட்காட்சி திடல் பஸ் நிலையம் ஆகிய இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 68 நாட்களுக்கு பிறகு பஸ்கள் மீண்டும் இயக்கப்பட்டதால், இயல்பு நிலை திரும்புகிறது. இதனால் பொதுமக்களும் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். எனினும் பெரும்பாலான வழித்தடங்களில் இயக்கப்பட்ட பஸ்களில் குறைவான பயணிகளே பயணம் செய்தனர்.

பஸ் நிலையம் ஸ்தம்பித்தது

நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து நேற்று நாகர்கோவிலுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் நாகர்கோவிலுக்கு செல்ல முடியா மல் பயணிகள் தவித்தனர். நெல்லை புதிய பஸ்நிலையத்தில் தற்காலிக காய்கறி கடைகள் இயங்கி வருவதால் மராட்டியம், உத்தரபிரதேச மாநிலங்களில் இருந்து லாரிகளில் நேற்று பல்லாரி, உருளைக்கிழங்கு லோடு வந்தது. இதனால் பஸ்களும், லாரிகளும் ஒரே இடத்தில் நின்றதால், இடம் இல்லாமல் பஸ் நிலையம் ஸ்தம்பித்தது.

இதன்பிறகு லாரிகள் வடக்கு புறமாக ஒதுக்கிவிடப்பட்டதை தொடர்ந்து பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டன. பஸ் நிலையத்தில் காய்கறிகள், வெங்காய மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அவற்றில் அழுகிய காய்கறிகளில் இருந்து துர்நாற்றம் வீசியதால், அவற்றை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

தென்காசி

தென்காசி மாவட்டத்திலுள்ள 228 பஸ்களில் 117 பஸ்கள் நேற்று இயங்க தொடங்கின. காலையில் தென்காசி பணிமனையில் இருந்து புறப்பட்ட பஸ்களுக்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது.

பின்னர் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு முக கவசம் அணிய வேண்டும், பஸ்களில் 60 சதவீத பயணிகளை மட்டுமே ஏற்ற வேண்டும், பயணிகள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும், கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தமாக கழுவிய பின்னரே பயணிகளை பஸ்சில் அனுமதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. பின்னர் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. கோட்ட மேலாளர் பழனியப்பன், தென்காசி கிளை மேலாளர் பொன்ராஜ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் 311 வழித்தடங்களில் 151 வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்பட்டன. நேற்று அதிகாலை 5 மணியில் இருந்து பஸ்கள் மீண்டும் இயக்கப்பட்டன. பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் முக கவசம், கையுறை அணிந்து பணியாற்றினர்.

தூத்துக்குடியில் பழைய பஸ் நிலையம், தற்காலிக காய்கறி மார்க்கெட்டாக இயங்கி வந்தது. இந்த நிலையில் மார்க்கெட் அப்புறப்படுத்தப்பட்டு, புதிய பஸ் நிலையம் பகுதிக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து பழைய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் மீண்டும் இயக்கப்பட்டன. பெரும்பாலான பஸ்களில் குறைவான பயணிகளே பயணம் செய்தனர்.

Next Story