பாப்பாரப்பட்டி அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி மாணவி பலி


பாப்பாரப்பட்டி அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி மாணவி பலி
x
தினத்தந்தி 3 Jun 2020 1:41 AM GMT (Updated: 3 Jun 2020 1:41 AM GMT)

பாப்பாரப்பட்டி அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவி பலியானாள்.

பாப்பாரப்பட்டி,

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள பனைக்குளம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகள் திவ்யா (வயது 15). இவள் பாப்பாரப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தாள். ஊரடங்கு காரணமாக தற்போது பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டதால் மாணவி செங்கல்சூளைக்கு வேலைக்கு சென்று வந்தாள்.

இந்தநிலையில் நேற்று நளப்பநாயக்கனஅள்ளி கிராமத்தில் உள்ள ஒரு சூளையில் இருந்து மாணவி உள்ளிட்ட தொழிலாளர்கள் டிராக்டரில் செங்கற்கள் ஏற்றிக்கொண்டு அதியமான்கோட்டைக்கு புறப்பட்டனர். செங்கற்கள் மீது மாணவி உள்ளிட்ட தொழிலாளர்கள் அமர்ந்து சென்றனர். எர்ரப்பட்டி அருகில் சென்றபோது மாணவி கையில் வைத்திருந்த துண்டு காற்றில் பறந்து கீழே விழுந்தது.

இதனால் திவ்யா, டிரைவரிடம் டிராக்டரை நிறுத்த சொல்லி விட்டு கீழே இறங்க முயன்றாள். அதற்குள் டிரைவர் டிராக்டரை எடுத்து விட்டார். இதில் நிலைதடுமாறி மாணவி கீழே விழுந்தபோது டிராக்டர் டைலரின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி மாணவி திவ்யா சம்பவ இடத்திலேயே பலியானாள். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பாப்பாரப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Tags :
Next Story