ரூ.230 கோடியில் நொய்யல் ஆறு புனரமைப்பு: நீர்நிலைகளை காப்பது நம் சந்ததிக்கு விட்டு செல்கிற மிகப்பெரிய சொத்து அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேச்சு


ரூ.230 கோடியில் நொய்யல் ஆறு புனரமைப்பு:  நீர்நிலைகளை காப்பது நம் சந்ததிக்கு விட்டு செல்கிற மிகப்பெரிய சொத்து  அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேச்சு
x
தினத்தந்தி 5 Jun 2020 10:29 PM GMT (Updated: 5 Jun 2020 10:29 PM GMT)

நீர்நிலைகளை காப்பது நம் சந்ததிக்கு விட்டுச் செல்கிற மிகப்பெரிய சொத்து என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.

கோவை,

கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களின் வழியாக செல்லும் நொய்யல் ஆற்றினை ரூ.230 கோடியில் விரிவாக்குதல், புனரமைத்தல் மற்றும் நவீனமாயக்கல் பணியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 28-ந் தேதி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து, கோவையை அடுத்த சித்திரைச்சாவடி அணைக்கட்டு, பேரூர் படித்துறை, சூலூர்-இருகூர் பிரிவு ஆகிய பகுதிகளில் நொய்யல் ஆற்றினை புனரமைக்கும் பணிகளுக்கு நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மீட்டெடுக்கப்படும்

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளின் தேவை என்ன என்பதை முற்றிலும் உணர்ந்தவர் என்பதோடு, விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்க நீர்வளத்தை பெருக்க வேண்டுமென்பதற்காகவே பல திட்டங்களையும் வகுத்து வருகிறார். கனவிலும் நிறைவேற்ற முடியாது என்று எல்லோரும் கூறிவந்த அத்திக்கடவு-அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தையே நிறைவேற்ற நிதி ஒதுக்கி சாதனை படைத்துள்ளது தமிழக அரசு. எனவே நொய்யல் ஆறும் நிச்சயமாக முழுமையாக மீட்டெடுக்கப்படும்.

குடிமராமத்துத் திட்டம் தொடங்கி விவசாயிகளுக்காக அவர் செய்துள்ள பல்வேறு திட்டங்களையும், படைத்துள்ள சாதனைகளையும் யாராலும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது. நொய்யல் ஆற்றை புனரமைக்கும் திட்டத்துக்குப் பின், கொங்கு மண்டலத்தில் விவசாயம் மீண்டும் புத்துயிர் பெறும். அதேபோன்று கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களில் நொய்யல் ஆற்றுப்படுகையிலுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டமும் பெருகும். நிலத்தடி நீரின் தரமும் உயரும்.

ரூ.230 கோடி

கோவை மாநகரில் நொய்யல் ஆறு மூலம் நீராதாரம் பெற்று வரும் குளங்கள் ஏற்கெனவே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புனரமைக்கப்பட்டு வருகின்றன. இந்தப்பணிகள் முடிவடையும்போது, கோவை நகரம் புதிய பொலிவைப் பெறுவதோடு, இங்குள்ள பல லட்சம் மக்களுக்கு புதிய பொழுதுபோக்கு இடங்களாகவும் அமையும். இன்னும் ஓராண்டுக்குள் இந்தத் திட்டங்களை விரைவாகவும் நிறைவாகவும் செய்து முடிப்பதற்கு அனைத்துத்துறை அலுவலர்களும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

இந்நிலையில் காவேரி வடிநிலத்தின் ஒரு கிளை நதியாக விளங்கும் நொய்யல் நதியினை மீட்டெடுக்கும் முயற்சியாக முதல்-அமைச்சர் ரூ.230 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள நொய்யல் ஆற்றின் 72 கி.மீ நீளப்பகுதியை சீரமைக்க ரூ.174 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த சீரமைப்பு பணிகளில் நொய்யல் ஆற்றில் மொத்தம் உள்ள 21 அணைக்கட்டுகளில் 18 அணைக்கட்டுகளும் முறைச்சார்ந்த குளங்களில் 22 குளங்களும், வழங்கு வாய்க்கால்களில் சிமெண்ட் லைனிங், மற்றும் தேவையின் அடிப்படையிலும் சிதிலமடைந்த அணைக்கட்டின் பகுதிகள் சீரமைத்தல் போன்ற அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்படும்.

மீண்டும் உயிர்பெறும்

மேலும், நொய்யல் ஆற்றில் நேரடியாக கழிவுகள் கலப்பதை அந்தந்த மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் நகரப் பகுதிகளின் சாக்கடை ஆற்றில் கலப்பதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. நொய்யல் மூலமாக ஏற்படுத்தப்பட்ட நீர்மேலாண்மை கட்டமைப்புகளை சீரமைக்கும் பட்சத்தில் நிலத்தடி நீர் அதிகமாகி நொய்யல் மீண்டும் உயிர்பெறும்.

நொய்யல் ஆறு புனரமைக்கும் பணியை நேரடியாக கண்காணிக்க ஒரு குழு அமைக்கப்படுகிறது. இக்குழுவில் பொதுப்பணித்துறை- நீர்வள ஆதாரம், வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை ஆகிய அரசுத்துறை அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆகிய அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் இடம் பெற உள்ளனர். இக்குழுவானது அரசு திட்டமிட்டபடி நொய்யல் நதி புனரமைத்தல், விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கும் பணிகளை நேரடியாக கண்காணித்து பணிகளை மேற்கொள்ள ஆலோசனைகள் வழங்கும்.

மிகப்பெரிய சொத்து

நமது ஊரகப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகள், ஆறுகள், சிற்றோடைகள் போன்றவற்றினை சீரமைத்து உயிர்ப்பிப்பதன் மூலம் தண்ணீர் தேவையில் தன்னிறைவுபெற இயலும். எனவே, நீர் நிலைகளை காப்பது, நமக்கான பணி மட்டுமில்லை, நம் சந்ததிக்கு விட்டுச் செல்கின்ற மிகப்பெரிய சொத்து. எனவே நாம் இணைந்து செயல்படுவோம், நீர் ஆதாரங்களை மீட்போம், நம் தலைமுறைக்கு இயற்கையின் கொடைகளை பரிசாக கொடுப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதனைத்தொடர்ந்து, இருகூர் பேரூராட்சியில் ஐ.யு.டி.எம். திட்டத்தின் கீழ் திருச்சி சாலையிலிருந்து ராவத்தூர் செல்லும் சாலையில் நொய்யல் ஆற்றின் குறுக்கே ரூ.3.87 கோடி செலவில் உயர் மட்டபாலம் அமைக்கும் பணியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சிகளில் தமிழக துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், கலெக்டர் ராஜாமணி, எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் கே.அர்ச்சுனன், வி.சி.ஆறுகுட்டி, எட்டிமடை சண்முகம், ஓ.கே.சின்னராஜ், கஸ்தூரிவாசு, வி.பி.கந்தசாமி, மாவட்ட வருவாய் அதிகாரி ராம துரைமுருகன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story