மதுரவாயல் அருகே பயங்கரம்: மனைவி, மகன் உயிருடன் எரித்துக்கொலை - வீட்டுக்குள் சேர்க்காததால் கணவர் ஆத்திரம்


மதுரவாயல் அருகே பயங்கரம்: மனைவி, மகன் உயிருடன் எரித்துக்கொலை - வீட்டுக்குள் சேர்க்காததால் கணவர் ஆத்திரம்
x
தினத்தந்தி 7 Jun 2020 11:56 PM GMT (Updated: 7 Jun 2020 11:56 PM GMT)

வீட்டுக்குள் சேர்க்காத ஆத்திரத்தில் மனைவி, மகனை உயிருடன் எரித்துக்கொலை செய்த கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

பூந்தமல்லி,

கொல்கத்தாவை சேர்ந்தவர் மக்புல் அலி(வயது 40). இவருடைய மனைவி கொரோசா பேகம்(40). இவர்களுக்கு அக்ரம் அலி(21) என்ற மகனும், மஜி(13) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் கடந்த சில வருடங்களாக மதுரவாயல் அடுத்த புளியம்பேடு மெயின் ரோடு, நூம்பல் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களாக கணவனை வீட்டில் சேர்க்காமல் தனது மகன், மகளுடன் கொரோசா பேகம் தனியாக வசித்து வந்தார்.

நேற்று அதிகாலை இவர்களது வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டது. அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். கொரோசா பேகம் வீட்டில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. வீட்டின் உள்ளே கொரோசா பேகம், அவருடைய மகன் அக்ரம் அலி ஆகியோர் உடலில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

கதவை உடைத்து உள்ளே சென்று இருவரின் உடலிலும் எரிந்த தீயை அணைத்தனர். இதில் கொரோசா பேகம், அக்ரம் அலி இருவரும் பலத்த தீக்காயம் அடைந்தனர். மஜிக்கு மட்டும் லேசான தீக்காயம் ஏற்பட்டது. மூன்று பேரையும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தாய்-மகன் இருவரும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர்.

இதுகுறித்து மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். அதில், மக்புல் அலி, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்கனவே திருமணமாகி மகன், மகளுடன் வசித்துவந்த கொரோசா பேகத்தை 2-வதாக திருமணம் செய்து கொண்டு சென்னைக்கு அழைத்து வந்தார். வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் ஷூ கம்பெனியில் 3 பேரும் வேலை செய்து வந்தனர். மகள் மஜி மட்டும் அருகில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தாள்.

குடிப்பழக்கத்துக்கு ஆளான மக்புல் அலி, கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமலும், வீட்டு செலவுக்கு பணம் கொடுக்காமலும் இருந்து வந்துள்ளார். மேலும் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனால் மக்புல் அலியை வீட்டில் சேர்க்காமல், கொரோசாபேகம் தனது மகன், மகளுடன் இந்த வீட்டிலும், மக்புல் அலி தனியாகவும் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் மீண்டும் வீட்டுக்கு வந்த மக்புல் அலி, கொரோசாபேகத்துடன் தகராறு செய்ததால் அவரை வீட்டுக்குள் சேர்க்க மறுத்து வெளியே அனுப்பி வைத்தார்.

இதனால் ஆத்திரமடைந்த மக்புல் அலி, நேற்று அதிகாலை கொரோசா பேகம் வீட்டுக்கு சென்றார். காற்றுக்காக வீட்டின் ஜன்னல் ஓரம் படுத்து இருந்த கொரோசா பேகம், அவருடைய மகன், மகள் ஆகிய 3 பேரும் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர். மக்புல் அலி, திறந்து கிடந்த ஜன்னல் வழியாக அவர்கள் 3 பேர் மீதும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதில் அங்கு படுத்து இருந்த கொரோசா பேகம், அக்ரம் அலி, மஜி ஆகிய 3 பேர் மீதும் தீப்பிடித்து எரிந்ததுடன், வீடு முழுவதும் பரவி தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இதில் படுகாயம் அடைந்த தாய், மகன் இருவரும் உயிரிழந்து விட்டனர். லேசான காயத்துடன் உயிர் தப்பிய மஜி, தந்தை தலைமறைவான நிலையில், தாய், சகோதரனை இழந்து அனாதையாக நிற்கிறாள்.

குடும்பத் தகராறில் தன்னை வீட்டுக்குள் சேர்க்காத ஆத்திரத்தில் மனைவி, மகனை உயிருடன் எரித்துக்கொலை செய்துவிட்டு தலைமறைவான மக்புல் அலியை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story