திருப்பரங்குன்றம் அருகே ஊரடங்கை மீறி சேவல் சண்டை; 14 பேர் கைது வாகனங்கள் பறிமுதல்


திருப்பரங்குன்றம் அருகே  ஊரடங்கை மீறி சேவல் சண்டை; 14 பேர் கைது   வாகனங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 8 Jun 2020 1:46 AM GMT (Updated: 8 Jun 2020 1:46 AM GMT)

திருப்பரங்குன்றம் அருகே ஊரடங்கை மீறி சேவல் சண்டை போட்டி நடத்திய 14 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பரங்குன்றம்,

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் திருப்பரங்குன்றம் அங்கயற்கன்னி காலனியில் நேற்று சேவல்களுக்கு இடையே சண்டை போட்டி நடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து ஆஸ்டின்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை மற்றும் போலீசார் உரிய இடத்திற்கு விரைந்து சென்றனர். இந்த நிலையில் போலீசாரை கண்டதும் சேவல் சண்டை போட்டியில் ஈடுபட்டிருந்தவர்கள் மற்றும் பார்வையாளர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கைது

இதுதொடர்பாக 37 பேர் மீது, ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதில் 14 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சண்டை போட்டியில் ஈடுபடுத்தப்பட்ட 5 சேவல்கள் மற்றும் ஒரு ஆட்டோ மற்றும் 30 இருசக்கர வாகனங்கள் மற்றும் ரூ.13 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தப்பி சென்ற 23 பேரை வலை வீசி தேடி வருகின்றனர்.

Next Story