நாமகிரிப்பேட்டையில்ரூ.25 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்


நாமகிரிப்பேட்டையில்ரூ.25 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்
x
தினத்தந்தி 10 Jun 2020 2:38 AM GMT (Updated: 10 Jun 2020 2:38 AM GMT)

நாமகிரிப்பேட்டையில் உள்ள ராசிபுரம் தாலுகா கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனை சங்க கிளை வளாகத்தில் மஞ்சள் ஏலம் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடந்து வருகிறது.

ராசிபுரம்,

ஊரடங்கு உத்தரவால் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக மஞ்சள் ஏலம் நடைபெறவில்லை. ஊரடங்கு தளர்வு காரணமாக கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை வழக்கம்போல் மஞ்சள் ஏலம் நடந்தது.

அதேபோல் நேற்றும் மஞ்சள் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் நாமகிரிப்பேட்டை, ஒடுவன்குறிச்சி, புதுப்பட்டி, முள்ளுக்குறிச்சி, மெட்டாலா, பேளுக்குறிச்சி, அரியாக்கவுண்டம்பட்டி, ஆத்தூர், ஊனத்தூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் மஞ்சளை விற்பனை செய்வதற்காக கொண்டு வந்திருந்தனர்.

சேலம், ஈரோடு, நாமகிரிப்பேட்டை, ஒடுவன்குறிச்சி உள்பட பல பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து மஞ்சளை போட்டி போட்டுக்கொண்டு ஏலம் எடுத்தனர். இந்த ஏலத்திற்கு விரலி ரகம் 450 மூட்டைகளும், உருண்டை ரகம் 160 மூட்டைகளும், பனங்காலி 40 மூட்டைகளும் கொண்டு வரப்பட்டு இருந்தன. இதில் விரலி ரகம் குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் ரூ.6,063 முதல் அதிகபட்சமாக ரூ.7,693-க்கும், உருண்டை ரகம் குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் ரூ.5,445 முதல் அதிகபட்சமாக ரூ.6,769-க்கும், பனங்காலி ரகம் குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் ரூ.12,802-க்கும் அதிகபட்சமாக ரூ.17,777-க்கும் ஏலம் விடப்பட்டது. இந்த வாரம் நடந்த ஏலத்தில் 650 மஞ்சள் மூட்டைகள் ரூ.25 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது.

Next Story