மத்திய அரசு அறிவித்த ரூ.20 ஆயிரம் கோடி கடனுதவி இன்னும் கிடைக்காத நிலை விரைந்து வழங்க சிறு,குறு தொழில் நிறுவனங்கள் கோரிக்கை


மத்திய அரசு அறிவித்த  ரூ.20 ஆயிரம் கோடி கடனுதவி இன்னும் கிடைக்காத நிலை  விரைந்து வழங்க சிறு,குறு தொழில் நிறுவனங்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 10 Jun 2020 3:23 AM GMT (Updated: 10 Jun 2020 3:23 AM GMT)

மத்திய அரசு அறிவித்த ரூ.20 ஆயிரம் கோடி கடனுதவியை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிறு, குறு தொழில்நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

விருதுநகர், 

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. இந்தநிலையில் மத்திய அரசு சிறு,குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி கடனுதவி வழங்கப்படும் என்று அறிவித்தது. வங்கிகள் இந்த கடனுதவி திட்டத்தை விரைந்து செயல்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்ட நிலையில் கடந்த வாரம் இந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதலும் அளித்துள்ளது.

இந்ததிட்டத்தின்படி வங்கிகள் முதல் கட்டமாக 2 லட்சம் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்கும் என தெரிவிக்கப் பட்டது. ஆனால் வங்கிகள் இதற்கான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி தெரிவிக்கவில்லை என்று கூறி கடனுதவி வழங்குவதை தாமதிக்கும் நிலை உள்ளது.

பொருளாதார ஊக்குவிப்பு திட்டம்

இதனால் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவித்த பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தின் பலன் இன்னும் கிடைக்காத நிலை உள்ளது.

மத்திய அரசின் கடனுதவி கிடைக்காத நிலையில் 75 சதவீத சிறு, குறு தொழில்நிறுவனங்களும், 83 சதவீத சுயதொழில் சார்பு நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளது என சிறு, குறு தொழில் செய்வோர் கூறுகின்றனர். இந்த கடனுதவி கிடைப்பதன் மூலம் ஊரடங்கால் முடங்கி இருந்த தொழிலை மீண்டும் தொடங்கி இயல்பு நிலைக்கு திரும்பலாம் என எண்ணி இருந்த சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு பாதிப்பு தொடரும் நிலையில் அவர்கள் பெரும் தவிப்புக்கு உள்ளாகி இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

எனவே மத்திய அரசு அறிவித்த ரூ.20 ஆயிரம் கோடி கடனுதவி திட்டம் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு தாமதம் இல்லாமல் கிடைக்க மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழில் நிறுவனத்தினர் எதிர்பார்க்கின்றனர்.

Next Story