கொரோனா ஊரடங்கு காலத்தில் சேலம் மாவட்டத்தில் 12,209 குழந்தைகள் பிறப்பு


கொரோனா ஊரடங்கு காலத்தில் சேலம் மாவட்டத்தில் 12,209 குழந்தைகள் பிறப்பு
x
தினத்தந்தி 10 Jun 2020 3:28 AM GMT (Updated: 10 Jun 2020 3:28 AM GMT)

கொரோனா ஊரடங்கு காலத்தில் சேலம் மாவட்டத்தில் 12 ஆயிரத்து 209 குழந்தைகள் பிறந்துள்ளன.

சேலம்,

சேலம் மாநகரில் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி மற்றும் புறநகரில் 13 அரசு ஆஸ்பத்திரிகள் உள்ளன. இது தவிர மாநகர் மற்றும் புறநகரில் 105 ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு காலத்திலும் அரசு மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்கப்பட்டது.

அதாவது கொரோனா ஊரடங்கு காலமான கடந்த மார்ச் மாதம் முதல் தற்போது வரை மட்டும் மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் 12 ஆயிரத்து 209 குழந்தைகள் பிறந்துள்ளன. இதுகுறித்து சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் நிர்மல்சன் கூறியதாவது:-

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆஸ்பத்திரிகளில் ஒரு மாதத்திற்கு 3 ஆயிரத்து 800 முதல் 4 ஆயிரம் குழந்தைகள் வரை பிறக்கும். ஆனால் ஊரடங்கு காலமான கடந்த 3 மாதங்களில் மட்டும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் 2 ஆயிரத்து 927 குழந்தைகள் பிறந்துள்ளன. இதுதவிர புறநகரில் உள்ள 13 அரசு ஆஸ்பத்திரிகளில் 1,410 குழந்தைகளும், 105 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 1,724 குழந்தைகளும் பிறந்துள்ளன. தனியார் ஆஸ்பத்திரிகளில் 6,148 குழந்தைகள் பிறந்துள்ளன.

ஆகவே மாவட்டத்தில் மொத்தம் 12 ஆயிரத்து 209 குழந்தைகள் பிறந்துள்ளன. குறிப்பாக அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவம் அதிகரித்துள்ளது. மேலும் அரசு ஆஸ்பத்திரிகளில் குழந்தைகளை பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு நிதி உதவி வழங்கப்படுகிறது. கொரோனா தொற்று பாதித்த 5 கர்ப்பிணிகளுக்கு அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story