ஆட்டுக்குட்டியை நாய் கடித்ததால் தகராறு: வாலிபர் வெட்டிக்கொலை 3 பேர் கைது


ஆட்டுக்குட்டியை நாய் கடித்ததால் தகராறு: வாலிபர் வெட்டிக்கொலை 3 பேர் கைது
x
தினத்தந்தி 10 Jun 2020 4:43 AM GMT (Updated: 10 Jun 2020 4:43 AM GMT)

ஆட்டுக்குட்டியை நாய் கடித்ததால் ஏற்பட்ட தகராறில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சாயல்குடி,

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே சொக்கானை கிராமத்தை சேர்ந்தவர் மூக்கூரான். இவரது சகோதரர்கள் சண்முகவேல், குமரையா. இவர்கள் 3 பேரின் குடும்பத்தினருக்கும் இடப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் மூக்கூரான் மகன் முனியசாமி (வயது 40) என்பவர் வளர்த்து வந்த நாய் சண்முகவேலுக்கு சொந்தமான ஆட்டுக்குட்டியை கடித்து விட்டதாம். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலானது. அப்போது மூக்கூரானின் மற்றொரு மகன் வில்வத்துரையை சண்முகவேல் தரப்பினர் அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.

இதில் படுகாயமடைந்த வில்வத்துரை(31) ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி வில்வத்துரை பரிதாபமாக இறந்து போனார்.

3 பேர் கைது

இந்த சம்பவம் தொடர்பாக சிவத்தையா(43). சண்முகவேல்(75), முத்துராமலிங்கம்(40), கார்த்திக்ராஜா(35) ஆகியோர் மீது சிக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா வழக்குப்பதிவு செய்து 3 பேரை கைது செய்தார். தலைமறைவாக உள்ள சிவத்தையாவை போலீசார் தேடிவருகின்றனர்.

Next Story