கோவில்களை திறக்க வலியுறுத்தி இந்து முன்னணியினர் நூதன போராட்டம்


கோவில்களை திறக்க வலியுறுத்தி இந்து முன்னணியினர் நூதன போராட்டம்
x
தினத்தந்தி 11 Jun 2020 12:35 AM GMT (Updated: 11 Jun 2020 12:35 AM GMT)

கோவில்களை திறக்க வலியுறுத்தி இந்து முன்னணியினர் நேற்று நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.

நெல்லை, 

கோவில்களை திறக்க வலியுறுத்தி இந்து முன்னணியினர் நேற்று நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.

கோவில்களை திறக்க கோரிக்கை

கொரோனா நோய் தொற்று பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையொட்டி கோவில்கள், மசூதிகள், கிறிஸ்தவ ஆலயங்களை திறக்கக்கூடாது என்று அரசு உத்தரவிட்டது. அதில் இருந்து இதுவரை கோவில்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த அனுமதி கிடையாது. ஆகம விதிப்படி பூஜைகள் நடக்கின்றன.

இந்தநிலையில் கடந்த 8-ந்தேதி முதல் கோவில்களை திறந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கலாம் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால் தமிழகத்தில் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதைக் கண்டித்தும், கோவில்களை திறந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் இந்து முன்னணியினர் நேற்று கோவில்களின் முன்பு ஒற்றை காலில் நின்று போராட்டம் நடத்தினார்கள்.

இந்து முன்னணியினர்

நெல்லை சந்திப்பு சாலைகுமாரசாமி கோவில் முன்பு மாநில செயலாளர் குற்றாலநாதன் தலைமையில் இந்து முன்னணியினர் ஒற்றை காலில் நின்று போராட்டம் நடத்தினார்கள். இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் போட்டனர்.

இதேபோல் பாளையங்கோட்டை ராஜகோபாலசுவாமி கோவில் முன்பு மாவட்ட பொதுச்செயலாளர் பிரம்மநாயகம் தலைமையிலும், நெல்லையப்பர் கோவில் முன்பு மாவட்ட நிர்வாகி சுடலை தலைமையிலும் போராட்டம் நடந்தது. இதேபோல் மாநகர பகுதிகளில் 23 கோவில்களின் முன்பு போராட்டம் நடந்தது.

சேரன்மாதேவி- தென்காசி

சேரன்மாதேவி பஸ்நிலையம் அருகே உள்ள வைத்தியநாத சுவாமி கோவில் முன்பு மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்வகுமார் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. தென்காசி நகர இந்து முன்னணி சார்பில் காசி விஸ்வநாதர் சுவாமி கோவில் முன்பு நடந்த போராட்டத்துக்கு நகர தலைவர் இசக்கிமுத்து தலைமை தாங்கினார். பொது செயலாளர் நாராயணன், வார்டு தலைவர்கள் சிவமாரி, சூர்யா ஆகியோர் கலந்துகொண்டனர்.

கடையம் சிவசைலத்தில் கடையம் ஒன்றிய பொதுச் செயலாளர் பிரபாகரன் தலைமையிலும், கடையத்தில் ஒன்றிய துணை தலைவர் காளிபாண்டியன் தலைமையிலும் போராட்டம் நடைபெற்றது. இதேபோல் வாசுதேவநல்லூர் உள்ளிட்ட பிற ஊர்களிலும் போராட்டம் நடைபெற்றது.

Next Story