மகள் வயது மாணவியுடன் காதல்: மினி பஸ் டிரைவரின் கள்ளக்காதலி வீட்டுமுன் மனைவி தர்ணா


மகள் வயது மாணவியுடன் காதல்: மினி பஸ் டிரைவரின் கள்ளக்காதலி வீட்டுமுன் மனைவி தர்ணா
x
தினத்தந்தி 11 Jun 2020 2:26 AM GMT (Updated: 11 Jun 2020 2:26 AM GMT)

களியக்காவிளை அருகே மினி பஸ் டிரைவரின் கள்ளக்காதலி வீட்டுமுன் மனைவி தர்ணா போராட்டம் நடத்தினார்.

களியக்காவிளை,

களியக்காவிளை அருகே மினி பஸ் டிரைவரின் கள்ளக்காதலி வீட்டுமுன் மனைவி தர்ணா போராட்டம் நடத்தினார். அப்போது என் மகள் வயதுள்ள நீ, கள்ளக்காதலில் ஈடுபடலாமா? என்று அவர் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மினி பஸ் டிரைவர்

குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள பகுதியை சேர்ந்த மினிபஸ் டிரைவருக்கு மனைவியும், 19 வயது மற்றும் 17 வயதுடைய 2 மகள்களும் உள்ளனர்.இந்தநிலையில் டிரைவர் பல்வேறு போலி பெயர்களை கூறி, மினி பஸ்சில் வரும் கல்லூரி மாணவிகளை தன் பேச்சு திறமையால் மயக்கி காதலித்து பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்ததாக கூறப்படுகிறது. அந்த பெண்களும் புகார் அளிக்கவில்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக களியக்காவிளை அருகே உள்ள பகுதியை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவியுடன் டிரைவர் பழகி வந்தார். அந்த மாணவியின் ஏழ்மையை பயன்படுத்தி திருமணம் செய்யாமலேயே அவருடன் வாழ்கை நடத்தி வருவதாக தெரிகிறது.

தர்ணா

இதைத்தொடர்ந்து மனைவியுடன் இருந்த தொடர்பை டிரைவர் துண்டித்தார். இதனால் 2 மகள்களுடன் கஷ்டப்பட்டு வந்த அவர் போலீசில் புகார் செய்ததாகவும், ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதன்பிறகு அவர், கணவரின் கள்ளக்காதலி வீட்டுக்கு சென்றார்.

அவர் வீட்டின் முன் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது எனது கணவருக்கு உனது வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். எனவே அவருடன் காதலில் ஈடுபடலாமா? அவரை விட்டு விடு என்று கல்லூரி மாணவியிடம் கூறினார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது.

அப்போது கல்லூரி மாணவி, உன் கணவருக்கும், எனக்கும் எந்த தொடர்புமில்லை என்று கூறினார். அதைத்தொடர்ந்து இருவரும் தகராறில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட சத்தத்தை தொடர்ந்து பொதுமக்கள் அங்கு திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுக்கவே இருவரையும், கல்லூரி மாணவியின் பெற்றோரையும் களியக்காவிளை போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர். பின்னர் அங்கிருந்து குழித்துறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story