குடும்பத்தினரும் வெளியே வர கூடாது: சென்னையில் கொரோனா பரிசோதனை செய்தாலே 14 நாட்கள் வீட்டு தனிமை - மாநகராட்சி அதிரடி உத்தரவு


குடும்பத்தினரும் வெளியே வர கூடாது: சென்னையில் கொரோனா பரிசோதனை செய்தாலே 14 நாட்கள் வீட்டு தனிமை - மாநகராட்சி அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 11 Jun 2020 10:30 PM GMT (Updated: 11 Jun 2020 9:40 PM GMT)

சென்னையில் கொரோனா பரிசோதனை செய்தாலே 14 நாட்கள் வீட்டில் குடும்பத்தினருடன் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது.

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா பரிசோதனை செய்ய 12 அரசு மற்றும் 18 தனியார் நிறுவனங்கள் என மொத்தம் 30 நிறுவனங்களுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அனுமதி வழங்கி உள்ளது. இந்தநிலையில் சென்னை ரிப்பன் மாளிகையில் கொரோனா பரிசோதனை மையங்களின் பிரதிநிதிகளுடன் மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில அவர் பேசியதாவது:-

மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 30 கொரோனா பரிசோதனை மையங்களில் வரும் நபர்களின் பெயர், தொலைபேசி எண், முகவரி உள்ளிட்ட முழு விவரங்கள் அனைத்தும் அவர்களது கையொப்பத்துடன் பெறவேண்டும். மேலும் இந்த அனைத்து தகவல்களையும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் வழிகாட்டுதலின் படி, அதற்கென உருவாக்கப்பட்ட செயலியிலும், இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யவேண்டும். மேலும் இந்த தகவல்கள் அனைத்தும் தினந்தோறும் மாநகராட்சிக்கு அனுப்பப்பட வேண்டும்.

பரிசோதனைக்கு உட்படுகிறவர்கள் கடந்த 15 நாட்கள் தொடர்பில் இருந்தவர்களின் விவரத்தை கட்டாயம் தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளவர்களின் தொடர்பில் இருப்பவர்களை எளிதில் கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க முடியும். வீடுகளில் சென்று கொரோனா பரிசோதனை செய்யும் பணியாளர்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 30 பரிசோதனை மையங்களில் இனி வரும் நாட்களில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டாலே, பரிசோதனை செய்யும் தனிநபரும், அவரது குடும்பத்தினரும் கட்டாயம் 14 நாட்கள் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி இணை கமிஷனர் பி.மதுசுதன் ரெட்டி, துணை கமிஷனர் ஜெ.மேகநாதரெட்டி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story