தூத்துக்குடி அருகே கொரோனா கட்டுப்பாட்டு மண்டலத்தில் கலெக்டர் ஆய்வு


தூத்துக்குடி அருகே கொரோனா கட்டுப்பாட்டு மண்டலத்தில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 11 Jun 2020 11:18 PM GMT (Updated: 11 Jun 2020 11:18 PM GMT)

தூத்துக்குடி அருகே கொரோனா கட்டுப்பாட்டு மண்டலத்தில் கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி அருகே உள்ள கூட்டாம்புளி பகுதியில் 8 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அந்த பகுதி முழுவதும் நோய் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வந்தது. இந்த பகுதியில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நோய் கட்டுப்பாட்டு தடுப்பு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வெளியே வருவதையும், வெளியே இருந்து பொதுமக்கள் நோய் கட்டுப்பாட்டு பகுதிக்குள் செல்லாமல் இருக்க பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

பின்னர் கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று நோய் சமூக பரவல் ஏற்படாத வகையில்,, தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நோய் கட்டுப்பாட்டு பகுதிக்குள் உள்ள பொதுமக்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் அத்தியாவசிய பொருட்களை தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் கொரோனா தொற்று அறிகுறிகள் உள்ள நபர்களின் முதன்மை தொடர்பாளர்கள் மற்றும் இரண்டாம் தொடர்பாளர்கள் என எந்த ஒரு நபரும் விடுபடாத வகையில் அனைவருக்கும் கொரோனா தொற்று நோய் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

கொரோனா தொற்று நோய் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் அனைத்து வீடுகளிலும் வழங்கப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று நோய் சமூக பரவல் ஏற்படாத வகையில், அரசு தெரிவித்துள்ள அனைத்து வழிமுறைகளை பின்பற்றி, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரான்ஜீத்சிங் கலோன், துணை ஆட்சியர் சுப்புலட்சுமி, தூத்துக்குடி தாசில்தார் செல்வக்குமார், தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் பானு, கூட்டாம்புளி பஞ்சாயத்து தலைவர் குமாரவேல் ஜான்சன் துரைமணி, டாக்டர்கள் ஜெனிபர் வித்தியா, மேரி ஸ்டெல்லா, வட்டார மருத்துவ அலுவலர் விமோனிஸ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story