பத்லாப்பூரில் மகளை கொன்று போலீஸ்காரர் மனைவி தற்கொலை


பத்லாப்பூரில் மகளை கொன்று போலீஸ்காரர் மனைவி தற்கொலை
x
தினத்தந்தி 12 Jun 2020 1:06 AM GMT (Updated: 12 Jun 2020 1:06 AM GMT)

பத்லாப்பூரில் மகளை கத்தியால் குத்திக் கொன்று போலீஸ்காரர் மனைவி தற்கொலை செய்து கொண்டார்.

மும்பை,

தானே மாவட்டம் பத்லாப்பூர் சிர்காவ் பகுதியை சேர்ந்தவர் மிராபாய் (வயது30). இவரது கணவர் மும்பை போலீசில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 7 வயதில் கிருத்திகா என்ற மகள் இருந்தாள். மிராபாயின் கணவர் நேற்றுமுன்தினம் மாலை வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டார்.

இரவு சாப்பிட்டு விட்டு மிராபாயும், கிருத்திகாவும் படுக்கையில் சென்று தூங்கிவிட்டனர். மிராபாயின் மாமியார் வீட்டு வளாகத்தில் படுத்து இருந்தார். இந்தநிலையில், நள்ளிரவில் படுக்கையறையில் இருந்து சிறுமி கிருத்திகாவின் அலறல் சத்தம் கேட்டது. சத்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்த அவளது பாட்டி ஓடிச்சென்று கதவை தட்டினார்.

கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. ஆனால் மிராபாய் கதவை திறக்கவில்லை. இதனால் பதறிப்போன அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது சிறுமி கிருத்திகாவும், மிராபாயும் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.

சிறுமிக்கு கழுத்து, வயிறு உள்ளிட்ட இடங்களில் பலத்த கத்திக்குத்து காயங்கள் இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த அவர்கள் தாய், மகள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், மிராபாய் தனது மகளை குத்திக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவர் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. எனினும் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story