வேலூரில் கோர விபத்து: வாகனம் மோதி 2 பேர் பலி


வேலூரில் கோர விபத்து: வாகனம் மோதி 2 பேர் பலி
x
தினத்தந்தி 12 Jun 2020 11:15 PM GMT (Updated: 12 Jun 2020 11:31 PM GMT)

வேலூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுதொடர்பாக போலீசார் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கோர விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வேலூர், 

வேலூர் மக்கான் அம்பேத்கர்நகரை சேர்ந்தவர்கள் கருணாகரன் (30), பெருமாள் (32). இருவரும் பெயிண்டர் வேலை செய்து வந்தனர். நேற்று காலை 5 மணியளவில் இருவரும் பெயிண்டிங் வேலைக்காக ஒரே மோட்டார் சைக்கிளில் சோளிங்கர் நோக்கி சென்றனர். மோட்டார் சைக்கிளை கருணாகரன் ஓட்ட, பின்னால் பெருமாள் அமர்ந்திருந்தார்.

சத்துவாச்சாரியை அடுத்த புதுவசூர் அருகே சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.

இதில் மோட்டார் சைக்கிள் தாறுமாறாக ஓடி சுமார் 50 அடி தூரத்துக்கு பின்னர் சாலையில் சரிந்து விழுந்தது. இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி சாலையில் விழுந்த பெருமாள், கருணாகரன் ஆகியோர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற பெயிண்ட் டப்பாக்கள் சாலையில் விழுந்து உடைந்து பெயிண்ட் இருவரின் உடல் அருகே மற்றும் சாலையில் கொட்டி கிடந்தன.

அதிகாலையில் நடந்த விபத்து என்பதால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் இதனை பொருட்படுத்தாமல் கடந்து சென்றனர். மேலும் அவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு எவ்வித தகவலும் தெரிவிக்கவில்லை. விபத்து நடைபெற்று சுமார் 30 நிமிடங்களுக்கு பின்னரே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து சத்துவாச்சாரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் மீது மோதி நிற்காமல் சென்ற வாகனம் குறித்து அப்பகுதியில் விசாரணை நடத்தினர். மேலும் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள வீடுகள், கடைகள், வணிகவளாகங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் விபத்து நடந்த சமயத்தில் சென்ற வாகனங்களை ஆய்வு செய்து வருகிறார்கள்.

அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒரே பகுதியை சேர்ந்த 2 பேர் பலியான சம்பவம் அம்பேத்கர்நகரில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story