விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம் - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்


விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம் - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
x
தினத்தந்தி 14 Jun 2020 11:00 PM GMT (Updated: 14 Jun 2020 8:15 PM GMT)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் திருந்திய பிரதம மந்திரி காப்பீடு திட்டத்தில் பயிர் காப்பீடு செய்யலாம் என்று மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தூத்துக்குடி, 


திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும் செயல்படுத்தப்படுகிறது.

2020-21-ம் ஆண்டில், தமிழ்நாட்டில் குறுவை பருவ பயிர்களை திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் காப்பீடு செய்ய அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இதன்படி நடப்பாண்டில், தூத்துக்குடி மாவட்டத்தில், 501 வருவாய் கிராமங்கள் அறிவிக்கை செய்யப்பட்டு உள்ளன.

இந்த திட்டத்தின் கீழ், கடன் பெறும் விவசாயிகள், அவர்கள் தங்கள் விருப்பத்தின் பெயரில் கடன் பெறும் வங்கிகளில்் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யப்படுவர். கடன்பெறாத விவசாயிகள், தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்தும் காப்பீட்டு நிறுவனத்தின் (அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட்) அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலமாகவோ, பொது சேவை மையங்கள் மூலமாகவோ வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ விருப்பத்தின்பேரில், பதிவு செய்து கொள்ளலாம்.

கடைசி நாள்

நடப்பு பருவத்தில் உளுந்து, நிலக்கடலை, பருத்தி பயிரிடும் விவசாயிகள் பதிவு செய்ய அடுத்த மாதம் (ஜூலை) 31-ந் தேதி கடைசி நாள் ஆகும். தோட்டக்கலை பயிர்களான வாழைக்கு 31.08.2020-ம், வெங்காயம், மிளகாய் மற்றும் வெண்டைக்கு 31.07.2020-ம் பதிவு செய்ய கடைசி நாள் ஆகும்.

விவசாயிகள் இறுதிநேர நெரிசலை தவிர்க்கவும், விவசாயிகளின் விண்ணப்பங்கள் விடுபடாமல் இருக்கவும், திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் காப்பீட்டு தொகையைக் காலத்தே செலுத்தி தங்களது பயிர்களை முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும்.

கட்டணம்

பயிர் காப்பீட்டு செய்ய நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.565-ம், இதர பயிர்களான உளுந்து பயிருக்கு ரூ.256-ம், நிலக்கடலை பயிருக்கு ரூ.326-ம், பருத்தி பயிருக்கு ரூ.480-ம், வெங்காயம் பயிருக்கு ரூ.945-ம், வாழை பயிருக்கு ரூ.2,617-ம், வெண்டை பயிருக்கு ரூ.798 மற்றும் மிளகாய் பயிருக்கு ரூ.1089-ம் காப்பீடு கட்டணமாக செலுத்த வேண்டும்.

விவசாயிகள் இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்யும்போது, முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து, கட்டணத்தொகையை செலுத்தியபின் அதற்கான ரசீதையும் பொதுச்சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பெற்றுக் கொள்ளலாம். அனைத்து விவசாயிகளும் இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Next Story