அரிசி, தேங்காய் வியாபாரிகளுக்கு கொரோனா எதிரொலி: வேலூர் நேதாஜி மார்க்கெட், மண்டி தெருவில் சுகாதார பணிகள்


அரிசி, தேங்காய் வியாபாரிகளுக்கு கொரோனா எதிரொலி: வேலூர் நேதாஜி மார்க்கெட், மண்டி தெருவில் சுகாதார பணிகள்
x
தினத்தந்தி 15 Jun 2020 4:53 AM GMT (Updated: 15 Jun 2020 4:53 AM GMT)

அரிசி, தேங்காய் வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று காரணமாக வேலூர் நேதாஜி மார்க்கெட், மண்டிதெரு உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து கடைகளும் மூடப்பட்டன. அங்கு கிருமிநாசினி தெளித்து சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

வேலூர்,

கொரோனா தொற்று தடுப்பு காரணமாக வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் மொத்த விற்பனை கடைகள் தினமும் இரவு 10 மணி முதல் காலை 9 வரை இயங்கி வந்தது. இங்குள்ள கடைகளில் சில்லறை வியாபாரிகள் காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள் வாங்கி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் காய்கறிகள், பழங்கள் வாங்க தற்காலிக சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் கடந்த சில நாட்களாக பொதுமக்கள் நேதாஜி மார்க்கெட்டுக்கு காய்கறிகள், மளிகை பொருட்கள் வாங்க குவிந்தனர். அவர்கள் முகக்கவசம் அணியாமலும், தனிமனித இடைவெளியையும் பின்பற்றவில்லை.

இதற்கிடையே வேலூர் மண்டித்தெருவில் அரிசி கடை நடத்தி வரும் வியாபாரிக்கும், நேதாஜி மார்க்கெட்டில் தேங்காய் வியாபாரம் செய்யும் முதியவருக்கும், காய்கறி கடையில் பணிபுரியும் ஒருவருக்கும் அடுத்தடுத்த நாட்களில் கொரோனா தொற்று உறுதியானது. அதைத்தொடர்ந்து சுகாதாரத்துறையினர் மண்டித்தெரு, நேதாஜி மார்க்கெட்டில் கடை வைத்துள்ள வியாபாரிகள், தொழிலாளர்களின் சளிமாதிரியை சேகரித்தனர். மேலும் கொரோனா தொற்று முன்எச்சரிக்கை நடவடிக்கையாக நேதாஜி மார்க்கெட், மண்டித்தெரு, லாங்குபஜார், சாரதிமாளிகை, பழைய மீன்மார்க்கெட் பகுதிகளில் கிருமிநாசினி தெளித்து சுகாதார பணிகள் மேற்கொள்ளவும், நேதாஜி மார்க்கெட்டில் உள்ள சில்லறை விற்பனை காய்கறி கடைகள், பழக்கடைகள், பூக்கடைகளை வேலூர் வெங்கடேஸ்வரா பள்ளி மைதானத்துக்கு மாற்றவும் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.

அதைத்தொடர்ந்து அப்பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளையும் நேற்று காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மூடும்படி மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் உத்தரவிட்டார். அதன்படி நேதாஜி மார்க்கெட், மண்டித்தெரு, லாங்குபஜார், சாரதிமாளிகை, பழைய மீன்மார்க்கெட், பர்மாபஜார் பகுதிகளில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டன.

2-வது மண்டல உதவிகமிஷனர் மதிவாணன், சுகாதார அலுவலர் சிவக்குமார் ஆகியோர் மேற்பார்வையில் மாநகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்தனர். மேலும் தூய்மை பணியாளர்கள் அனைத்து கடைகளின் முன்பாக பிளச்சிங் பவுடர் போட்டு சுகாதார பணிகள் மேற்கொண்டனர். மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவையும் மீறி சில வியாபாரிகள் நேதாஜி மார்க்கெட்டில் கடைகளை திறந்திருந்தனர். வேலூர் வடக்கு போலீசார் அந்த கடைகளை மூடும்படி அறிவுறுத்தினர். அதைத்தொடர்ந்து அவர்கள் கடைகளை மூடிவிட்டு சென்றனர்.

இதேபோன்று அண்ணாசாலையோரம் பழவியாபாரம் செய்தவர்கள் மற்றும் தள்ளுவண்டி, சரக்கு ஆட்டோவில் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்தவர்களையும், அப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரிந்தவர்களையும் போலீசார் எச்சரித்து அனுப்பினர். சுகாதார பணிக்காக அனைத்து கடைகளும் மூடப்பட்டதால் 24 மணி நேரமும் வாகனங்கள், மக்கள் நடமாட்டம் என்று பரபரப்பாக காணப்படும் நேதாஜி மார்க்கெட், மண்டித்தெரு, லாங்குபஜார் உள்ளிட்டவை வெறிச்சோடி காணப்பட்டது.

Next Story