வேலூர் மாவட்டத்தில், காய்கறி, மளிகை கடைகள் வாரத்தில் 3 நாட்கள் மட்டும் திறக்க அனுமதி - இன்று முதல் அமலுக்கு வருவதாக கலெக்டர் தகவல்


வேலூர் மாவட்டத்தில், காய்கறி, மளிகை கடைகள் வாரத்தில் 3 நாட்கள் மட்டும் திறக்க அனுமதி - இன்று முதல் அமலுக்கு வருவதாக கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 20 Jun 2020 5:05 AM GMT (Updated: 20 Jun 2020 5:05 AM GMT)

வேலூர் மாவட்டத்தில் காய்கறி, மளிகை, துணி, நகைக்கடைகள் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே திறக்கப்படும். இந்த நடைமுறை இன்று (சனிக்கிழமை) முதல் அமல்படுத்தப்படுகிறது என்று கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்து உள்ளார்.

வேலூர், 

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், வணிகர் சங்கத்தினர், ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர், துணிக்கடை, மளிகைக்கடை சங்கத்தினர், அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்துக்கு வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கி பேசியதாவது:- வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது. 2 வாரங்களில் மட்டும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை 10 மடங்கிற்கு மேல் உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் வரை மாவட்டம் முழுவதும் 408 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.

அதன்படி மாவட்டம் முழுவதும் காய்கறி, மளிகை கடைகள் (சில்லரை விற்பனை), நகைக்கடைகள், துணிக்கடைகள் திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 நாட்களில் காலை 6 முதல் மாலை 6 வரை மட்டுமே செயல்படும். மற்ற 4 நாட்கள் விடுமுறையாகும். இறைச்சி, மீன்கடைகள் ஞாயிறு, புதன்கிழமைகளில் காலை 6 முதல் மாலை 6 மணி வரையும், மளிகை, பருப்பு, அரிசி, நவதானியம், காய்கறி மொத்த விற்பனை கடைகள் திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 நாட்களில் இரவு 10 முதல் காலை 6 மணி வரை இயங்கலாம். ஓட்டல்கள், பேக்கரிகள் ஞாயிற்றுக்கிழமையை தவிர மற்ற 6 நாட்களும் காலை 6 முதல் மாலை 6 மணிவரை திறக்கவும், அங்கு பார்சல் மட்டும் வழங்க அனுமதி அளிக்கப்படுகிறது.

பெட்ரோல் பங்குகள், மருந்துகடைகள் அனைத்து நாட்களும் திறந்திருக்கலாம். திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் காலை 6 முதல் மாலை 6 மணிவரை மட்டும் வாரச்சந்தைகள் இயங்க வேண்டும். உழவர்சந்தைகளுக்கு தற்போதுள்ள நடைமுறையே தொடரும். வேலூர் சாரதி மாளிகையில் உள்ள கடைகள் திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 நாட்கள் காலை 6 முதல் மாலை 6 மணிவரை திறக்கலாம். இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.

மாவட்டத்தில் உள்ள டீ, காபி கடைகள் சலூன்கடைகள், அழகுநிலையங்கள், ஸ்பாக்கள் ஆகியவை வருகிற 30-ந் தேதி வரை திறக்க தடை விதிக்கப்படுகிறது. வேலூர் சுண்ணாம்புகாரதெரு, ரொட்டிகாரதெரு, ஆகாபஜார், அண்ணாபஜார், நியுசிட்டிங்பஜார், பர்மாபஜார் ஆகிய தெருக்களில் உள்ள கடைகள் மூடப்படுகின்றன. நேதாஜி மார்க்கெட், மண்டித்தெருவில் செயல்படும் மொத்த காய்கறி வியாபார கடைகள் அனைத்தும் கிருஷ்ணா தியேட்டர் எதிரேயுள்ள மாங்காய் மண்டியில் இனி இயங்கும்.

நேதாஜி மார்க்கெட், மண்டித்தெரு, லாங்குபஜார் உள்ளிட்ட பகுதிகளில் காணப்படும் கடை வியாபாரிகள், தொழிலாளர்கள் உள்பட அனைவரும் கொரோனா தொற்று பரிசோதனை செய்ய வேண்டும். அதில், கொரோனா இல்லை என்று தெரிய வந்தால் மட்டுமே அவர்கள் கடை திறக்க அனுமதிக்கப்படுவார்கள். அதுவரை அந்த கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

Next Story