வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம்: காதலனை கரம் பிடிக்க முடியாததால் உயிரை மாய்த்த கல்லூரி மாணவி


வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம்: காதலனை கரம் பிடிக்க முடியாததால் உயிரை மாய்த்த கல்லூரி மாணவி
x
தினத்தந்தி 20 Jun 2020 6:01 AM GMT (Updated: 20 Jun 2020 6:01 AM GMT)

உசிலம்பட்டி அருகே காதலனை கரம் பிடிக்க முடியாததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உசிலம்பட்டி,

உசிலம்பட்டி அருகே உள்ள துரைச்சாமிபுரம்புதூரை சேர்ந்தவர் ஒச்சுக்காளை. இவரது மகள் சினேகா(வயது 20). தனியார் கல்லூரியில் பி.ஏ. படித்து வந்தார். இவர் மதுரை சம்மட்டியாபுரத்தில் உள்ள தனது தாய் மாமனை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் சினேகாவின் பெற்றோர் தாய்மாமனை திருமணம் செய்ய சம்மதம் தெரிவிக்கவில்லை. இந்தநிலையில் சினேகாவின் பெற்றோர் வேறு ஒருவருக்கு சினேகாவை திருமணம் செய்து வைக்க முடிவு செய்து நிச்சயம் செய்துள்ளனர். இந்த திருமணத்தில் சினேகாவிற்கு விருப்பமில்லை. 

இதனால் அவர் தனது பெற்றோரிடம் இந்த திருமணத்தில் எனக்கு விருப்பமில்லை, தாய்மாமனை தான் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன் என தெரிவித்துள்ளார். மேலும் நிச்சயம் செய்து முடித்த பின்னர் தாய் மாமனுக்கு போன் செய்து எனக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்து விட்டார்கள். நீ உடனே வந்து என்னை அழைத்து சென்று விடு என கூறியுள்ளார்.

இதற்கு அவர் அதற்கு மறுத்து விட்டதாக தெரிகிறது. இதில் மனவேதனையில் இருந்த சினேகா ஊருக்கு அருகில் மலையடிவாரத்தில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையில் அந்த மாணவி எழுதியதாக ஒரு கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அதில் என் சாவுக்கு எனது தாய்மாமன், அவரது குடும்பத்தினர் தான் காரணம். எனது பெற்றோர் கிடையாது என குறிப்பிட்டு இருந்தது. இந்த கடிதத்தை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காதலனை கரம் பிடிக்க முடியாது என்று நினைத்த சினேகா தற்கொலை செய்து கொண்டது அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Next Story