வேலூர் சிறையில் பரபரப்பு விசாரணை கைதி ஜன்னல் கம்பியை வயிற்றில் குத்தி தற்கொலை முயற்சி


வேலூர் சிறையில் பரபரப்பு விசாரணை கைதி ஜன்னல் கம்பியை வயிற்றில் குத்தி தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 23 Jun 2020 5:18 AM GMT (Updated: 23 Jun 2020 5:18 AM GMT)

வேலூர் சிறையில் விசாரணை கைதி ஜன்னல் கம்பியை வயிற்றில் குத்திக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதனால் சிறையில் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர்,

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள பல்லக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன். இவருடைய மகன் சாந்தகுமார் (வயது 24), தொழிலாளி. இவரும், அதே பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண்ணும் காதலித்தனர். அப்போது சாந்தகுமார் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி, அந்தப் பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. அதில் அந்தப் பெண் கர்ப்பமானார்.

இதையடுத்து அவர், சாந்தகுமாரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தினார். ஆனால் அதை ஏற்க மறுத்த அவர், அந்த இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். அதிர்ச்சி அடைந்த இளம்பெண் குடியாத்தம் அனைத்து மகளிர் போலீசில் காதலன் மீது புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

தற்கொலை முயற்சி

இதற்கிடையே, 7 மாத கர்ப்பிணியான இளம்பெண்ணுக்கு கடந்த மே மாதம் திடீரெனப் பிரசவ வலி ஏற்பட்டது. அவர், வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு குறை பிரசவத்தில் ஆண் குழந்தைப் பிறந்தது. சாந்தகுமார் அதன்பிறகும் தனது காதலியை மனைவியாக ஏற்க மறுத்தார். 3-ந்தேதி சாந்தகுமார் வேறொரு பெண்ணை அவசரமாக ரகசிய திருமணம் செய்தார்.

இதையறிந்த போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து சாந்தகுமாரை கைது செய்தனர். அவரை, கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் அடைத்தனர். விசாரணை கைதியான சாந்தகுமார் நேற்று காலை சிறையில் தங்கியிருந்த அறை ஜன்னல் கம்பியை வளைத்து வயிற்றில் குத்திக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது. இதைப் பார்த்த சக கைதிகள் சிறை அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர்.

பரபரப்பு

சிறை அலுவலர்கள் விரைந்து வந்து சாந்தகுமாரை மீட்டு சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கு, அவருக்கு முதலுதவி அளித்து, பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் சிறையில் கைதி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story