கீரனூர் அருகே தி.மு.க. பிரமுகருக்கு அரிவாள் வெட்டு 4 பேருக்கு வலைவீச்சு


கீரனூர் அருகே தி.மு.க. பிரமுகருக்கு அரிவாள் வெட்டு 4 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 26 Jun 2020 12:04 AM GMT (Updated: 26 Jun 2020 12:04 AM GMT)

கீரனூர் அருகே தி.மு.க. பிரமுகரை அரிவாளால் வெட்டியது தொடர்பாக 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கீரனூர்,

கீரனூரை அடுத்த கீழத்தெருவை சேர்ந்தவர் ஆனந்தன் என்ற ராமசாமி(வயது 45). விவசாயியான இவர் தி.மு.க. பிரமுகரும் ஆவார். திருச்சி- புதுக்கோட்டை புறவழிச்சாலையில் உள்ள ஒரு பெரிய இடம் சம்பந்தமாக இவருக்கும், உறவினர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு ராமசாமி தனது ஸ்கூட்டரில் அன்னவாசல் பிரிவு சாலையில் இருந்து குளத்தூருக்கு திரும்பியபோது, அவருக்கு எதிரே 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர், தங்கள் வாகனத்தை ராமசாமியின் ஸ்கூட்டர் மீது மோதினர்.

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த ராமசாமியை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் அவரது வலது கை மற்றும் காலில் பலத்த அரிவாள் வெட்டு விழுந்தது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடி வந்ததால், 4 பேரும் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர். இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராமசாமி, பின்னர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவர் அளித்த புகாரின்பேரில் கீரனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரகாந்த் வழக்குப்பதிவு செய்து குளத்தூரை சேர்ந்த ரவிச்சந்திரனின் மகன் கோகுல்ராஜா மற்றும் 3 பேரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story