கோத்தகிரி அருகே நடைபாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி திரண்ட பொதுமக்களால் பரபரப்பு


கோத்தகிரி அருகே நடைபாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி திரண்ட பொதுமக்களால் பரபரப்பு
x
தினத்தந்தி 26 Jun 2020 2:33 AM GMT (Updated: 26 Jun 2020 2:33 AM GMT)

கோத்தகிரி அருகே நடைபாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி திரண்ட பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

கோத்தகிரி,

கோத்தகிரி அருகே உள்ள காமராஜர் நகரில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஒரு குறிப்பிட்ட நடைபாதை தனது நிலத்தில் இருப்பதாகக்கூறி அதை தனி நபர் ஆக்கிரமித்து விட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து அங்கு வருவாய்த்துறையினர் நில அளவை செய்து ஆய்வு நடத்தினர். மேலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். ஆனால் சம்பந்தப்பட்ட தனி நபர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நிலுவையில் இருப்பதால், வருவாய்த்துறையினரால் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இந்த நிலையில் அங்கு நடைபாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி நேற்று ஏராளமானோர் திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இரு தரப்பினரிடையே தகராறு ஏற்படும் சூழல் நிலவியது. இதுகுறித்து தகவல் அறிந்த தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் பூவேந்திரன் மற்றும் அதிகாரிகள், போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருப்பதால், தீர்ப்பு வரும் வரை நடைபாதையை அனைவரும் பயன்படுத்தி கொள்ளலாம் என்று தெரிவித்தனர். இதை இரு தரப்பினரும் ஏற்று கொண்டு கலைந்து சென்றனர்.

Next Story