ரூ.1,652 கோடியில் நிறைவேற்றப்படும் அத்திக்கடவு -அவினாசி திட்டப்பணிகள்; முதல்-அமைச்சர் பார்வையிட்டார்


ரூ.1,652 கோடியில் நிறைவேற்றப்படும் அத்திக்கடவு -அவினாசி திட்டப்பணிகள்; முதல்-அமைச்சர் பார்வையிட்டார்
x
தினத்தந்தி 26 Jun 2020 2:38 AM GMT (Updated: 26 Jun 2020 2:38 AM GMT)

ரூ.1,652 கோடியில் நிறைவேற்றப்படும் அத்திக்கடவு -அவினாசி திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.

ஈரோடு,

ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டத்தில் வறண்ட பகுதி மக்களின் குடிநீர் ஆதாரத்துக்காகவும், விவசாய தேவைக்காகவும் பவானி ஆற்றின் உபரி நீரை ஏரி, குளங்களில் தேக்கி நிலத்தடி நீரை செறிவூட்டும் வகையில் அத்திக்கடவு -அவினாசி திட்டம் அறிவிக்கப்பட்டது. 50 ஆண்டுகளாக 3 மாவட்ட மக்களின் கனவுத்திட்டமாக இது இருந்தது. இந்த திட்டத்தை நிறைவேற்றக்கோரி பல்வேறு போராட்டங்கள் நடந்தது. இந்த திட்டம் நிறைவேற்றப்படும் போது ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை தொகுதி அதிக பயன் அடையும் என்று விவசாயிகள் குரல் கொடுத்தனர்.

தோப்பு என்.டி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தார். இதுபோன்ற பல்வேறு கோரிக்கைகளையும் ஏற்றுக்கொண்ட அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா திட்ட ஆய்வுப்பணிக்கு உத்தரவிட்டார். அவருக்குப்பின் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசின் நிதியில் இருந்து ரூ.1,652 கோடியை ஒதுக்கி கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ந்தேதி பணிகளை தொடங்கி வைத்தார்.

முதல் -அமைச்சர்பார்வையிட்டார்

பவானி கூடுதுறை அருகே காலிங்கராயன் அணைக்கட்டு அருகே பவானி ஆற்றில் இருந்து நீரேற்றம் செய்யப்பட்டு குழாய்கள் மூலம் 3 மாவட்டங்களில் 1,044 ஏரி, குளம், குட்டைகள் நீர் நிரப்பப்பட உள்ளன. 24 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற இருக்கிறது. இந்த திட்டப்பணிகள் மிகத்தீவிரமாக நடந்து வருகிறது. முதல் நீர்த்தேக்கம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதிக்கு உள்பட்ட திருவாச்சி ஊராட்சி சோளிபாளையத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. 70 லட்சம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்டதாக இந்த நீர்த்தேக்கம் உருவாக்கப்படுகிறது. இந்த பணிகளை தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை பார்வையிட்டார். பணியின் தற்போதைய நிலை குறித்து கேட்டு அறிந்த முதல்-அமைச்சர், வருகிற 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு முன் அத்திக்கடவு -அவினாசி திட்டம் மூலம் விவசாயிகள் பாசனவசதி பெறும் வகையில் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். தொடர்ந்து விவசாயிகளை சந்தித்து அவர்களுடன் முதல்-அமைச்சர்கலந்துரையாடினார்.

வரவேற்பு

முன்னதாக பெருந்துறை வந்த முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், உடுமலை கே.ராதாகிருஷ்ணன், ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன், போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்திகணேசன் ஆகியோர் வரவேற்றனர். பெருந்துறை தொகுதி அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சரும், முன்னாள் மாவட்ட செயலாளருமான தோப்பு என்.டி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க.வினர் சமூக இடைவெளியை பின்பற்றி வரவேற்பு அளித்தனர்.

ஈரோடு மாநகர் மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.தென்னரசு, வி.பி.சிவசுப்பிரமணி மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர். நிகழ்ச்சிகளில் எம்.எல்.ஏ.க்கள் இ.எம்.ஆர்.ராஜா என்கிற ராஜா கிருஷ்ணன், எஸ்.ஈஸ்வரன், உ.தனியரசு, மாவட்ட வருவாய் அதிகாரி ச.கவிதா, ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் எம்.இளங்கோவன், செயற்பொறியாளர் விஜயகுமார், ஈரோடு மாநகராட்சி முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், சிட்கோ வாரிய முன்னாள் தலைவர் சிந்து ரவிச்சந்திரன், முன்னாள் மண்டல தலைவர் ரா.மனோகரன், சிந்தாமணி தலைவர் ஜெகதீசன், மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சவுண்டம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கலந்து கொண்டவர்கள்

விழாவில் கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பெரியய்யா, கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி. கார்த்திகேயன், பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் கே.மணிவாசகம், முதன்மை தலைமை பொறியாளர் கே.ராமமூர்த்தி, கோவை மண்டல தலைமை பொறியாளர் ஆர்.விஸ்வநாத், அவினாசி சிறப்பு திட்ட கண்காணிப்பு பொறியாளர் எஸ்.சிவலிங்கம், செயற்பொறியாளர் கே.அன்பழகன், பெருந்துறை கோட்ட சிறப்பு திட்ட செயற்பொறியாளர் எஸ்.மன்மதன், எல் அன்டு டி நிறுவன திட்ட இயக்குனர் பி.ரவிக்குமார், திட்ட மேலாளர் வெங்கடேஸ்வரன், பெருந்துறை வேளாண்மை விற்பனையாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் விஜயன் என்கிற ராமசாமி, துணைத்தலைவர் ஜெகதீஷ், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சாந்தி ஜெயராஜ், துணைத்தலைவர் உமா மகேஸ்வரன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், முன்னாள் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் மணிமேகலை விஸ்வநாதன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஹேமலதா சம்பத், பார்வதி ராஜ், அப்புசாமி, அ.தி.மு.க. நிர்வாகிகள் அருள்ஜோதி, செல்வராஜ், பெரியசாமி, கைலங்கிரி குப்புசாமி உள்படபலர் கலந்து கொண்டனர்.

Next Story