சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து விழுப்புரம் மாவட்டத்தில் கடைகள் அடைப்பு


சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து விழுப்புரம் மாவட்டத்தில் கடைகள் அடைப்பு
x
தினத்தந்தி 27 Jun 2020 1:58 AM GMT (Updated: 27 Jun 2020 1:58 AM GMT)

சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து விழுப்புரம் மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன.

விழுப்புரம்,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் இறந்த சம்பவத்தை கண்டித்தும், இவர்கள் மரணத்திற்கு காரணமான சம்பந்தப்பட்ட போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும், ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் ஆரோக்கியத்துடன் இருப்பதாக சான்றிதழ் கொடுத்த அரசு டாக்டர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், உயிரிழந்த வியாபாரிகள் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், காவல்துறையின் தாக்குதலை கண்டித்தும், உயிரிழந்த 2 பேருக்கும் அஞ்சலி செலுத்தும் வகையிலும் நேற்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வணிகர் சங்கங்களின் பேரமைப்பை சேர்ந்த வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.

கடைகள் அடைப்பு

அதன்படி விழுப்புரம் நகரில் மளிகை கடைகள், துணிக்கடைகள், ஓட்டல்கள், நகை கடைகள், செல்போன் விற்பனை கடைகள் என அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. தற்போது கொரோனாவால் காய்கறி கடைகள் மூடப்பட்டு தற்காலிகமாக காமராஜ் நகராட்சி பள்ளி மைதானத்தில் காய்கறி விற்பனை நடந்து வருவதாலும், உழவர் சந்தை மூடப்பட்டு தற்போது பீமநாயக்கன்தோப்பு நகராட்சி பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வருவதாலும் அந்த கடைகள் மட்டும் நேற்று திறந்திருந்தன.அதுபோல் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் ஒன்றிரண்டு டீக்கடைகளும் திறந்திருந்தன.

இருப்பினும் பெரும்பாலான வியாபாரிகள் தங்கள் கடைகளை அடைத்திருந்ததால் விழுப்புரம் நகரில் உள்ள சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. குறிப்பாக எப்போதும் பரபரப்பாக காணப்படும் விழுப்புரம்- புதுச்சேரி சாலை, திரு.வி.க. சாலை, காமராஜர் வீதி, கே.கே.சாலை, எம்.ஜி.சாலை, சென்னை- திருச்சி நெடுஞ்சாலை மற்றும் மார்க்கெட் வீதிகள் ஆகியவை வெறிச்சோடி காணப்பட்டன.

மருந்து கடைகள் மூடல்

இந்த கடையடைப்பு போராட்டத்திற்கு தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்து பங்கேற்றதால் விழுப்புரத்தில் நேற்று காலை 11 மணி வரை மருந்து கடைகளும் அடைக்கப்பட்டு அதன் பிறகே திறக்கப்பட்டன. இதேபோல் விக்கிரவாண்டி, செஞ்சி, மேல்மலையனூர், திண்டிவனம், வானூர், மரக்காணம், திருவெண்ணெய்நல்லூர் உள்பட மாவட்டம் முழுவதும் பெரும்பாலான வியாபாரிகள் தங்கள் கடைகளை அடைத்திருந்தனர். பின்னர் மாலை 5 மணியளவில் வியாபாரிகள் தங்கள் வீட்டு முன்பு தீபம் ஏற்றி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பொதுமக்கள் அவதி

வழக்கமாக கடையடைப்பு போராட்டம் நடந்தால் அந்த போராட்டம் மாலை 5 மணியளவில் முடிவடைந்து அதன் பிறகு கடைகள் திறக்கப்படும். ஆனால் தற்போது கொரோனா நோய் பரவலை தடுக்க மாலை 4 மணி வரை மட்டுமே கடைகளை திறக்க அனுமதி என்பதால் மருந்து கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் நேற்று ஒரு நாள் முழுவதுமே மூடப்பட்டிருந்தன. இதனால் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

Next Story