சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடை அடைப்பு, ஆர்ப்பாட்டம்


சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடை அடைப்பு, ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 Jun 2020 5:44 AM GMT (Updated: 27 Jun 2020 5:44 AM GMT)

சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடை அடைப்பு, ஆர்ப்பாட்டம் நடந்தது.

பனப்பாக்கம்,

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் போலீசார் தாக்கியதில் தந்தை, மகன் உயிரிழந்தை சம்பவத்தை கண்டித்து நேற்று பனப்பாக்கத்தில் வணிகர் சங்கம் சார்பில் முழு கடை அடைப்பு நடைபெற்றது. பனப்பாக்கம் பகுதியில் உள்ள மளிகை கடைகள், காய்கறிகடைகள், ஜவுளிக்கடைகள், சிறிய பெட்டிக்கடைகள் உள்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தது.

மாலை 5 மணிக்கு வணிகர் சங்க தலைவர் குகானந்தம் தலைமையில் மெழுகுவர்த்தி தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் வணிகர் சங்க நிர்வாகிகள், பல்வேறு கடைகளின் உரிமையாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

வாணியம்பாடி

வாணியம்பாடியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் சாத்தான்குளம் பகுதியில் போலீசார் தாக்கியதில் தந்தை மற்றும் மகன் இறந்த சம்பவத்தை கண்டித்தும், சம்பவத்தில் ஈடுபட்ட காவலர்கள் மீது வழக்குபட்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வாணியம்பாடியில் அனைத்து வணிகர்களும் ஒரு நாள் கடைகளை அடைத்து தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதனால் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டு இருந்தது.

ஆற்காடு

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் இறப்பிற்கு காரணமான போலீசாரை கண்டித்தும் அவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரியும் ராணிப்பேட்டை மாவட்ட அனைத்து வணிகர் சங்க பேரமைப்பு மற்றும் ஆற்காடு நகர வணிகர் சங்க பேரமைப்பின் ஆகியவை சார்பில் நேற்று ஆற்காட்டில் ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

இதையொட்டி ஆற்காட்டில் உள்ள பால் மற்றும் மருந்து கடைகள் தவிர பெரும்பாலான கடைகள் மூடப்பட்டு இருந்தன. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

குடியாத்தம்

குடியாத்தம் ஒன்றிய மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், இவரின் மகன் பென்னிக்ஸ் ஆகியோரின் சாவுக்கு காரணமான போலீஸ் துறையினரை பணிநீக்கம் செய்து, கொலை வழக்கில் கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்ட துணைத்தலைவர் நிஜாமுதீன் தலைமையில் ஒன்றியத்தின் பல கிராமங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் குடியாத்தத்தில் நகர செயலாளர் காத்தவராயன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய செயலாளர் சாமிநாதன், பேரணாம்பட்டு ஒன்றிய செயலாளர் குணசேகரன், மாவட்ட துணை செயலாளர் சரவணன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஆம்பூர்

சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து ஆம்பூரில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் நசீர் அஹமத் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் இக்கட்சியினர் தங்களுடைய வீடுகளுக்கு முன்பு ஆங்காங்கே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அரக்கோணம்

அரக்கோணத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சார்பில், சாத்தான்குளத்தில் தந்தை, மகன் சாவிற்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட இணை செயலாளர் ஏ.பி.எம்.சீனிவாசன் தலைமை தாங்கினார். கட்சி நிர்வாகிகள் துரைராஜ், மோகன், ரமேஷ், கமல், தென்னரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில், தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் போலீசார் தாக்கியதில் தந்தை, மகன் உயிரிழந்தை சம்பவத்தை கண்டித்து ராணிப்பேட்டை முத்துக்கடை பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வாலாஜா தாலுகா செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் எல்.சி.மணி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரகுபதி, தாலுகா குழு உறுப்பினர் நிலவுகுப்புசாமி உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தந்தை, மகன் சாவுக்கு காரணமான போலீசாரை கைது செய்ய வேண்டும். அவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும், குடும்பத்தில் இருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், மத்திய புலனாய்வு பிரிவு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் போட்டனர்.

Next Story