புதுச்சேரியில் ஒரேநாளில் 87 பேருக்கு கொரோனா சாவு எண்ணிக்கை 10 ஆக உயர்வு


புதுச்சேரியில் ஒரேநாளில் 87 பேருக்கு கொரோனா சாவு எண்ணிக்கை 10 ஆக உயர்வு
x
தினத்தந்தி 28 Jun 2020 3:18 AM GMT (Updated: 28 Jun 2020 3:18 AM GMT)

புதுச்சேரியில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 600-ஐ தாண்டியது. ஒரேநாளில் முதல்-அமைச்சர் அலுவலக ஊழியர் உள்பட 87 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. 82 வயது மூதாட்டி ஒருவர் பலியானதன் மூலம் சாவு எண்ணிக்கை 10 ஆனது.

புதுச்சேரி,

புதுச்சேரியில் கதிர்காமம் அரசு மருத்துவமனை, ஜிப்மரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது தினந்தோறும் அதிக எண்ணிக்கையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்தபடி உள்ளது. ஒரேநாளில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகபட்சமாக 59 ஆக இருந்து வந்தது.

இந்தநிலையில் நேற்று 517 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் முதல்-அமைச்சர் அலுவலக ஊழியர் உள்பட 87 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பு புதிய உச்சம் ஆகும். இதன் மூலம் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 619 ஆக உயர்ந்துள்ளது.

இதில் கதிர்காமம் கொரோனா சிறப்பு மருத்துவமனையில் 63 பேரும், ஜிப்மரில் 9 பேரும், காரைக்காலில் 15 பேரும் என சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 388 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். இதுவரை 221 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர்.

மூதாட்டி பலி

கொரோனா தொற்று காரணமாக முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் உயிரிழந்து உள்ளார். அவர் கடந்த 16-ந் தேதி கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சர்க்கரை நோய் உள்ளிட்ட பாதிப்புகள் இருந்ததாக கூறப்படுகிறது. இவரையும் சேர்த்து கொரோனா தொற்றினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

ஊரடங்கு தளர்வு மற்றும் சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அங்கிருந்து வந்தவர்களால் தான் புதுவையில் கொரோனா தொற்று அதிக அளவில் பாதித்ததற்கு காரணம் என்றும், காரைக்காலில் 75 சதவீதம் பேர் சென்னையில் இருந்து திரும்பியவர்களால் தான் கொரோனா பரவி உள்ளது என்றும் சுகாதார துறை தெரிவித்துள்ளது.

முகக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலை

முகக் கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்து பரவிய தொற்று காரணமாக இதுவரை 96 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று அறிகுறி உள்ளவர்களில் 33 பேர் ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று அறிகுறி உள்ளவர்களை லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி, வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி ஆகிய மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இதுவரை 14,689 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 13,908 பேருக்கு தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது. 216 பேருக்கு முடிவு வரவேண்டி உள்ளது.

Next Story