கிறிஸ்டியான்பேட்டை சோதனைச்சாவடியில் இ-பாஸ் இல்லாமல் வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன


கிறிஸ்டியான்பேட்டை சோதனைச்சாவடியில் இ-பாஸ் இல்லாமல் வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன
x
தினத்தந்தி 28 Jun 2020 6:13 AM GMT (Updated: 28 Jun 2020 6:13 AM GMT)

காட்பாடி கிறிஸ்டியான் பேட்டை சோதனைச்சாவடியில் இ-பாஸ் இல்லாமல் வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. இதனால் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்தவர்கள் அவதிக்கு ஆளானார்கள்.

காட்பாடி,

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதைத் தடுக்க அரசு, மாநிலம் விட்டு மாநிலம் செல்லவும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும் கண்டிப்பாக இ-பாஸ் இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் இ-பாஸ் இருந்தால் தான் மாவட்டம் விட்டு மாவட்டம், மாநிலம் விட்டு மாநிலம் செல்ல முடியும்.

தமிழக-ஆந்திர எல்லையான காட்பாடி கிறிஸ்டியான்பேட்டையில் போலீஸ் சோதனைச் சாவடி, வனத்துறை சோதனைச் சாவடி, வட்டாரப் போக்குவரத்துச் சோதனைச் சாவடி என மூன்று சோதனைச் சாவடிகள் உள்ளன. ஆந்திராவில் இருந்து காட்பாடி வழியாக வேலூர் வருவதற்கு இந்த சோதனை சாவடிகளை கடந்து தான் வாகனங்கள் வரவேண்டும்.

இ-பாஸ்

அவ்வாறு மாநில எல்லையை கடந்து வரவேண்டுமானால் கண்டிப்பாக இ-பாஸ் தேவை. பாஸ் இல்லாமல் வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன. இ-பாஸ் கொண்டு வரும் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்யப்படுகிறது. மேலும் இ-பாஸ் உண்மைத் தன்மை கண்டறியப்பட்டு, அது உண்மையானதாக இருந்தால் மட்டுமே மேற்கொண்டு அவர்கள் பயணம் செய்ய போலீசார் அனுமதிக்கின்றனர்.

போலீசாரின் கடுமையான சோதனை காரணமாக காரில் வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்தவர்கள் கிறிஸ்டியான் பேட்டை எல்லையில் மருத்துவமனைக்கு செல்வதற்கான ஆவணங்களை காட்டியதை தொடர்ந்து அங்கேயே காரை நிறுத்திவிட்டு நடந்து சென்று, வேறு ஆட்டோவில் ஏறி வேலூர் மருத்துவமனைக்கு சென்றனர். இது நோயாளிகளை மிகுந்த சிரமத்துக்கு ஆளாக்கியது.

இது குறித்து காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு துரை பாண்டியன், தாசில்தார் பாலமுருகன் ஆகியோர் கூறுகையில், மாநில எல்லையான கிறிஸ்டியான்பேட்டை சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன. எந்தக் காரணத்தைக் கொண்டும் அவை வேலூர் மாவட்டத்துக்குள் அனுமதிக்கப்படுவதில்லை என்றனர்.

Next Story