3 மாதங்களுக்கு பிறகு சலூன் கடைகள் திறப்பு; பாதுகாப்பு வழிமுறைகள் கடைபிடிப்பு


3 மாதங்களுக்கு பிறகு சலூன் கடைகள் திறப்பு; பாதுகாப்பு வழிமுறைகள் கடைபிடிப்பு
x
தினத்தந்தி 28 Jun 2020 11:15 PM GMT (Updated: 28 Jun 2020 10:46 PM GMT)

மராட்டியத்தில் 3 மாதங் களுக்கு பிறகு மீண்டும் பாதுகாப்பு வழிமுறை களுடன் சலூன் கடைகள் நேற்று திறக்கப்பட்டன.

மும்பை,

கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ள மராட்டியத்தில் 5-ம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்த ஊரடங்கு நாளையுடன் முடிவுக்கு வருகிறது. இதற்கிடையே கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்த தொடங்கியதில் இருந்து மூடப்பட்ட கடைகளில் சலூன் கடைகளும் அடங்கும். கொரோனாவால் வீழ்ச்சி அடைந்த மாநில பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையாக மிஷன் பிகின் அகெய்ன் என்ற திட்டத்தின் கீழ் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஊரடங்கு தளர்வுகள் காரணமாக மற்ற கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்ட போதிலும், கொரோனா அச்சம் காரணமாக சலூன் கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. இவை கடந்த 3 மாதங்களாக மூடப்பட்டு இருந்தன.

இந்தநிலையில், தங்களது தொழிலை தொடங்க அனுமதிக்க வேண்டும் என சலூன்கடை உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற இடங்களில் நிபந்தனைகளுடன் சலூன் கடைகள் செயல்பட முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அனுமதி அளித்தார். மேலும் சலூன் கடைகள் செயல்படுவதற்கான பாதுகாப்பு வழிகாட்டுதல்களையும் அரசு வெளியிட்டது.

இந்தநிலையில், அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து மராட்டியத்தில் 3 மாதத்துக்கு பிறகு நேற்று முதல் சலூன் கடைகள் திறக்கப்பட்டன. சலூன் கடைக்காரர்கள் அரசின் பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடித்து தங்களது பணியை தொடங்கினர்.

முககவசம் மற்றும் கையுறை அணிந்து வாடிக்கையாளர்களுக்கு முடி வெட்டும் பணியை மேற்கொண்டனர். வாடிக்கையாளர்கள் கைகளை சுத்தம் செய்துவிட்டு உள்ளே வருவதற்காக கடையின் முன்பு கிருமிநாசினி வைத்திருந்தனர். அரசின் பாதுகாப்பு விதிமுறைகளை சில சலூன்கடைகாரர்கள் கண்டிப்புடன் கடைபிடித்ததை காண முடிந்தது. அவர்கள் தங்கள் கடை முன் முடி வெட்டவும், தலைக்கு டை அடித்து கொள்ள திரண்ட அனைவரையும் அனுமதிக்கவில்லை. மாறாக குறைந்த எண்ணிக்கையிலேயே வாடிக்கையாளர்களுக்கு தங்களது சேவையை செய்தனர்.

கொரோனா ஊரடங்கால் பெரும்பாலான சலூன் கடைகளில் வேலைபார்க்கும் தொழிலாளர்கள் பலரும் சொந்த ஊர் சென்றிருப்பதால் பணியாளர்கள் இல்லாமல் பல சலூன் கடைகள் திறக்கப்படாமல் மூடியே கிடந்ததையும் காண முடிந்தது. தொழிலாளர்கள் சொந்த ஊர்களில் இருந்து திரும்பினால் தான் மூடி கிடக்கும் தங்களது சலூன் கடைகளை திறக்க முடியும் என்று அந்த கடைகளின் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

இந்தநிலையில், கொரோனாவால் மாநிலத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள மும்பையில் சலூன் கடைகள் திறக்கப்பட்ட போதிலும் கொரோனா அச்சம் காரணமாக சலூன் கடைகளில் சென்று முடிவெட்டி கொள்வதற்கு பயப்படுவதாக மும்பைவாசிகள் பலரும் தெரிவித்தனர். 

Next Story