அடுத்த மாதம் 26-ந் தேதி வரைபெங்களூருவில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு - போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் அறிவிப்பு


அடுத்த மாதம் 26-ந் தேதி வரைபெங்களூருவில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு - போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் அறிவிப்பு
x
தினத்தந்தி 28 Jun 2020 11:05 PM GMT (Updated: 28 Jun 2020 11:05 PM GMT)

பெங்களூருவில் அடுத்த மாதம் (ஜூலை) 26-ந் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டு இருப்பதாக போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் அறிவித்துள்ளார்.

பெங்களூரு,

பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

பெங்களூருவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே பெங்களூருவில் கடந்த 26-ந் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அந்த உத்தரவு அடுத்த மாதம் (ஜூலை) 26-ந் தேதி நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு பெங்களூருவில் அமலில் இருக்கும். கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் விதமாக இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதனால் பொது இடங்களில் கண்டிப்பாக சமூக இடைவெளியை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும். ஒரு நபரில் இருந்து மற்றொரு நபருக்கு 1 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். கடைகள், ஓட்டல்களில் உரிமையாளர்கள், ஊழியர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். பொதுமக்களும் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் 20 பேருக்கு மேல் கலந்து கொள்ள அனுமதி கிடையாது.

அரசின் உத்தரவுகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக முக கவசம் அணியாமல் சுற்றுவது, சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருத்தல், அனுமதியை மீறி பொதுநிகழ்ச்சிகளை நடத்தினால், அவர்கள் மீது எம்.டி.எம்.ஏ. சட்டப்பிரிவின்படி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

முக கவசம் அணியாதவர்களிடம் இருந்து அபராதமும் வசூலிக்கப்படும். எனவே பெங்களூரு நகரவாசிகள் அரசின் உத்தரவை கடைப்பிடிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story