வியாசர்பாடியில் தம்பியை இரும்பு கம்பியால் குத்திக்கொன்ற அண்ணன்


வியாசர்பாடியில் தம்பியை இரும்பு கம்பியால் குத்திக்கொன்ற அண்ணன்
x
தினத்தந்தி 29 Jun 2020 11:15 PM GMT (Updated: 29 Jun 2020 11:15 PM GMT)

வியாசர்பாடியில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தம்பியை இரும்பு கம்பியால் குத்திக்கொலை செய்த அண்ணனை போலீசார் தேடி வருகின்றனர்.

பெரம்பூர்,

சென்னை வியாசர்பாடி மகாகவி பாரதி நகர் 19-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் ஸ்டெல்லா. இவருக்கு ஜான்சன் (வயது 35 ) மற்றும் ஜான் (32) என 2 மகன்கள். இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை. அண்ணன்- தம்பி இருவருக்கும் குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் குடிபோதையில் அண்ணன்-தம்பி இருவரும் சண்டை போட்டனர். இருவருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர்.

இதில் ஆத்திரம் அடைந்த ஜான்சன், இரும்பு கம்பியால் தம்பி என்றும் பாராமல் ஜானின் வயிற்றில் குத்தியதாக தெரிகிறது. இதில் படுகாயம் அடைந்த ஜானை, அக்கம் பக்கத்தினர் மீட்டு சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை முடிந்து வீட்டுக்கு வந்த ஜான், நேற்று காலை பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து எம்.கே.பி. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களது தாய் ஸ்டெல்லாவிடம் விசாரணை நடத்தினர். அதில் குடிபோதையில் அண்ணன்-தம்பி இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதாக தெரிவித்தார். லைமறைவாக உள்ள ஜான்சனை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story