போலீஸ் நிலையம் எதிரே துணிகரம்: டைல்ஸ் கடையின் மேற்கூரையை உடைத்து திருட்டு - அரியாங்குப்பத்தில் பரபரப்பு


போலீஸ் நிலையம் எதிரே துணிகரம்: டைல்ஸ் கடையின் மேற்கூரையை உடைத்து திருட்டு - அரியாங்குப்பத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 30 Jun 2020 2:02 AM GMT (Updated: 30 Jun 2020 2:02 AM GMT)

அரியாங்குப்பம் போலீஸ் நிலையம் எதிரே உள்ள டைல்ஸ் கடையின் மேற்கூரையை உடைத்து பணம் மற்றும் டைல்ஸ்களை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அரியாங்குப்பம்,

புதுவை மாநிலம் பூரணாங்குப்பத்தை சேர்ந்தவர் காசிநாதன் (வயது 47). இவர் 2 பங்குதாரர்களுடன் சேர்ந்து அரியாங்குப்பத்தில் புதுச்சேரி- கடலூர் மெயின் ரோட்டில் டைல்ஸ் மொத்த விற்பனை கடை வைத்துள்ளனர். கடந்த 27-ந் தேதி (சனிக் கிழமை) மதியம் 2 மணியளவில் கடையை மூடுவிட்டு காசிநாதன் வீட்டுக்கு சென்றுவிட்டார். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடைக்கு விடுமுறை விடப்பட்டது.

வழக்கம்போல் நேற்று காலை 9 மணியளவில் கடையை காசிநாதன் திறந்து உள்ளே சென்றார். அப்போது பணம் வைத்திருந்த மேசை திறந்து இருந்தது. ஒருசில பொருட்கள் சிதறி கிடந்தன. கடையின் மேற்கூரையில் ஒரு ஆள் நுழையும் அளவுக்கு ஓட்டை போடப்பட்டிருந்தது.

இது குறித்து அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு, விசாரணை நடத்தினர். மர்மநபர்கள் கடையின் மேற்கூரையை உடைத்து உள்ளே புகுந்து மேஜையில் டிராயரில் வைத்திருந்த பணம் மற்றும் டைல்ஸ்களை திருடிச்சென்றது தெரியவந்தது.

இந்த திருடு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். டைல்ஸ் கடை அருகில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் உதவியோடு மர்ம நபர்களை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். போலீஸ் நிலையம் எதிரே உள்ள கடையிலேயே மர்மநபர்கள் துணிகரமாக கைவரிசை காட்டிய சம்பவம் அரியாங்குப்பத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அரியாங்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்க செயலாளர் சந்துரு, துணை தலைவர் பாண்டியன், துணை செயலாளர் நடராஜன் ஆகியோர் கூறும்போது, ‘கொரோனா தாக்கத்தால் வியாபாரம் இன்றி அனைத்து வியாபாரிகளும் கஷ்டத்தில் இருந்து வரும் நிலையில், இதுபோன்ற திருட்டு சம்பவம் அரியாங்குப்பம் பகுதியில் தொடர் கதையாக இருந்து வருகிறது. கடந்த 18-ந் தேதி இந்த டைல்ஸ் கடை அருகே உள்ள மரவாடியில் மர்ம நபர்கள் பணத்தை திருடிச் சென்றனர். மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள், கம்ப்யூட்டரையும் எடுத்துச்சென்றனர். இது குறித்து போலீசில் புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. அரியாங்குப்பம் பகுதியில் தொடர் திருட்டை தடுக்க போலீசார் இரவு நேரத்தில் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். இதேநிலை தொடர்ந்தால் அனைத்து வியாபாரிகளும் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபடுவோம்’ என்றனர்.

Next Story