2-ம் கட்ட ஊரடங்கு தளர்வு வழிகாட்டுதல் வெளியீடு: வெளிமாநிலங்களில் இருந்து கர்நாடகத்திற்கு வர அனுமதி தேவை இல்லை - கர்நாடக அரசு உத்தரவு


2-ம் கட்ட ஊரடங்கு தளர்வு வழிகாட்டுதல் வெளியீடு: வெளிமாநிலங்களில் இருந்து கர்நாடகத்திற்கு வர அனுமதி தேவை இல்லை -  கர்நாடக அரசு உத்தரவு
x
தினத்தந்தி 30 Jun 2020 11:15 PM GMT (Updated: 30 Jun 2020 8:08 PM GMT)

கர்நாடக அரசு நேற்று 2-ம் கட்ட ஊரடங்கு தளர்வு வழிகாட்டுதலை வெளியிட்டது. இதில் வெளிமாநிலங்களில் இருந்து கர்நாடகத்திற்கு வர அனுமதி தேவை இல்லை என்று கர்நாடக அரசு கூறியுள்ளது.

பெங்களூரு,

நாட்டில் கொரோனாவை தடுக்க பிரதமர் மோடி கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கை அறிவித்தார். அப்போது தொடங்கிய ஊரடங்கு இன்னும் தொடர்கிறது. நேற்றுடன் முதலாம் கட்ட ஊரடங்கு தளர்வு நிறைவடைந்த நிலையில், மத்திய அரசு நேற்று முன்தினம் 2-ம் கட்ட ஊரடங்கு தளர்வு வழிகாட்டுதலை வெளியிட்டது.

அந்த வழிகாட்டுதல்களை குறிப்பிட்டு கர்நாடக அரசு நேற்று வழிகாட்டுதலை பிறப்பித்தது. இதில் மத்திய அரசு கூறிய அனைத்து அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. இந்த வழிகாட்டுதல் வருகிற 31-ந் தேதி வரை அமலில் இருக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது. கர்நாடக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் தொடர்பான அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு வெளியே பள்ளி, கல்லூரிகள், கல்வி நிலையங்கள், பயிற்சி மையங்கள் வருகிற 31-ந் வரை மூடப்படுகிறது. ஆன்லைன் மூலமான கல்வி தொடர்ந்து ஊக்குவிக்கப்படுகிறது. மத்திய-மாநில அரசுகளின் பயிற்சி மையங்கள் வருகிற 15-ந் தேதி முதல் இயங்கும். இதற்கு வழிகாட்டுதல் வெளியிடப்படும்.

மெட்ரோ ரெயில், திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள், பொழுது போக்கு பூங்காக்கள், மதுபான விடுதிகள், மாநாட்டு அரங்குகள் போன்றவற்றுக்கு அனுமதி இல்லை. சமூக, அரசியல், விளையாட்டு, கேளிக்கை விடுதிகள், கலாசார நிகழ்ச்சிகள், மத விழாக்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் நிகழ்வுகளுக்கு அனுமதி இல்லை.

குறைந்த எண்ணிக்கையில் பயணிகள் விமானம் மற்றும் ரெயில் போக்குவரத்திற்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த சேவைக்கு தடை இல்லை. கர்நாடகத்தில் இரவு 8 மணியில் இருந்து காலை 5 மணி வரை இரவு நேர முழு ஊரடங்கு அமலில் இருக்கும். வருகிற 5-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 2-ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். இதில் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும்.

ஆகஸ்டு மாதம் 2-வது வாரம் வரை அனைத்து அரசு ஊழியர்களுக்கும் சனிக்கிழமை விடுமுறை விடப்படுகிறது. பெங்களூரு மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகங்கள், கொரோனா பரவலை தடுக்க உள்ளூர் அளவில் சில நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கும் முடிவை எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.

வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் கர்நாடகத்திற்குள் வந்து செல்ல எந்த தடையும் இல்லை. இதற்கு தனியாக எந்த இ-பாசோ அல்லது முன் அனுமதியோ தேவை இல்லை. அதே நேரத்தில் வெளிமாநிலங்களில் இருந்து வருகிறவர்கள், சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள வழிகாட்டுதலை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த 2-ம் கட்ட ஊரடங்கு தளர்வு வழிகாட்டுதல் இன்று (புதன்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. இது வருகிற 31-ந் தேதி வரை அமலில் இருக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.

Next Story