இதுவரை இல்லாத அளவுக்கு கர்நாடகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 20 பேர் பலி - புதிதாக 947 பேருக்கு வைரஸ் தொற்று


இதுவரை இல்லாத அளவுக்கு கர்நாடகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 20 பேர் பலி - புதிதாக 947 பேருக்கு வைரஸ் தொற்று
x
தினத்தந்தி 30 Jun 2020 11:30 PM GMT (Updated: 30 Jun 2020 8:14 PM GMT)

கர்நாடகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 20 பேர் மரணம் அடைந்துள்ளனர். புதிதாக 947 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த 3 நாட்களில் 2 நாட்கள் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியிருந்தது. இந்த நிலையில் நேற்று பாதிப்பு சற்று குறைந்து ஆயிரத்திற்கு கீழே அதாவது 947 என்ற அளவில் பதிவாகியுள்ளது. கர்நாடகத்தில் பொறுத்தவரையில் பாதிப்பு திடீரென அதிகரிப்பதும், சில நாட்களில் குறைவதும் வாடிக்கையாக உள்ளது.

ஒரு நாள் பாதிப்பு குறைந்ததை வைத்து ஆறுதல் அடைய முடியாத நிலை உள்ளது. இருந்தாலும் நேற்று முன்தினத்துடன் ஒப்பிடும்போது, நேற்று பரவாயில்லை என்று சற்று ஆறுதல்படுத்தி கொள்ளலாம். பாதிப்பு சற்று குறைந்திருந்தாலும், இதுவரை இல்லாத புதிய உச்சமாக ஒரே நாளில் 20 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று முன்தினம் 19 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 14 ஆயிரத்து 45 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் மாநிலத்தில் நேற்று புதிதாக 947 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கர்நாடகத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 992 ஆக ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் இதுவரை 7 ஆயிரத்து 918 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 235 பேர் அடங்குவர்.

கர்நாடகத்தில் புதிதாக கொரோனா பாதித்தோரில், பெங்களூரு நகரில் 503 பேர், பல்லாரியில் 61 பேர், ஹாவேரியில் 49 பேர், தட்சின கன்னடாவில் 44 பேர், உத்தரகன்னடாவில் 40 பேர், விஜயாப்புராவில் 39 பேர், சிவமொக்காவில் 22 பேர், பெங்களூரு புறநகரில் 21 பேர், பீதர், தார்வாரில் தலா 17 பேர், ஹாசனில் 16 பேர், கலபுரகி, ராய்ச்சூரில் தலா 15 பேர், சிக்பள்ளாப்பூரில் 13 பேர், தாவணகெரே, ராமநகரில் தலா 12 பேர், சிக்கமகளூருவில் 10 பேர், உடுப்பி, மைசூருவில் தலா 9 பேர், பாகல்கோட்டை, குடகில் தலா 4 பேர், கோலார், சித்ரதுர்காவில் தலா 3 பேர், யாதகிரி, மண்டியா, பெலகாவி, கதக்கில் தலா 2 பேர், துமகூருவில் ஒருவர் உள்ளனர்.

கர்நாடகத்தில் நேற்று கொரோனாவுக்கு 20 பேர் பலியாகியுள்ளனர். இதில் பல்லாரியை சேர்ந்த 31 வயது பெண், 55 வயது பெண், 63 வயது மூதாட்டி, 56 வயது நபர், 58 வயதில் 2 பெண்கள், ஹாவேரியை சேர்ந்த 75 வயது மூதாட்டி, 60 வயது மூதாட்டி, விஜயாப்புராவில் 85 வயது மூதாட்டி, 52 வயது நபர், தார்வாரை சேர்ந்த 83 வயது, 69 வயது முதியவர்கள், கோலாரை சேர்ந்த 44 வயது நபர், பெங்களூரு நகரை சேர்ந்த 63 வயது முதியவர், 45 வயது நபர், 64 வயது மூதாட்டி, 50 வயது நபர், தாவணகெரேயை சேர்ந்த 50 வயது பெண், பெலகாவியை சேர்ந்த 32 வயது இளைஞர், மைசூருவை சேர்ந்த 36 வயது நபர் மரணம் அடைந்துள்ளனர்.

இதன் மூலம் கொரோனாவுக்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை 250 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகத்தில் இதுவரை 6 லட்சத்து 20 ஆயிரத்து 747 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதில் நேற்று 15 ஆயிரத்து 588 மாதிரிகள் அடங்கும். 43 ஆயிரத்து 625 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story