கணவர் இறந்த விரக்தியில் ஒரே புடவையில் மகளுடன் தற்கொலை செய்த பெண்


கணவர் இறந்த விரக்தியில் ஒரே புடவையில் மகளுடன் தற்கொலை செய்த பெண்
x
தினத்தந்தி 30 Jun 2020 8:59 PM GMT (Updated: 30 Jun 2020 8:59 PM GMT)

சென்னையை அடுத்த கீழ்கட்டளை, கணவர் இறந்த விரக்தியில் ஒரே புடவையில் மகளுடன் தாய் தற்கொலை செய்துகொண்டார்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த கீழ்கட்டளை துரைசாமி நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் பிரபாவதி (வயது 47). இவரது கணவர் கோவிந்தசாமி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மகள் சோப்னா (13). அங்குள்ள ஒரு பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இதையடுத்து கீழ்கட்டளை காமராஜர் நகரில் வசிக்கும் பிரபாவதியின் தந்தை செல்வராஜ் (84), தனது மகள் மற்றும் பேத்தியை பராமரித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று செல்வராஜ் மகளின் வீட்டிற்கு வந்த பார்த்த போது, கதவு பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து, நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்காததால், சந்தேகமடைந்த செல்வராஜ் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தார். அப்போது பிரபாவதியும் அவரது மகளும் ஒரே புடவையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது பற்றி தகவல் அறிந்ததும் மடிப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தற்கொலை செய்துக் கொண்ட தாய், மகள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.

விசாரணையில், கணவர் இறந்த விரக்தியில் பிரபாவதி தற்கொலை செய்தது தெரியவந்தது. இது குறித்து மடிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story