வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரியில் கொரோனாவை தடுக்க - ஆராய்ச்சி கூடம்


வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரியில் கொரோனாவை தடுக்க - ஆராய்ச்சி கூடம்
x
தினத்தந்தி 30 Jun 2020 11:52 PM GMT (Updated: 30 Jun 2020 11:52 PM GMT)

வெங்கடேஸ்வரா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவை தடுக்க ஆராய்ச்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

புதுச்சேரி,

புதுச்சேரி வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன்கள் டாக்டர் ரத்தினசாமி, டாக்டர் மகாதேவன், மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் முரளிதரன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா என்ற கண்ணுக்கு புலப்படாத வைரசுக்கு எதிராக டாக்டர்கள் போரிட்டு வருகின்றனர். தற்போதைய கொரோனா சூழ்நிலையில் மருத்துவர்கள் தங்கள் உயிரை துச்சமென கருதி பல லட்சம் உயிர்களை காப்பாற்றி வருகிறார்கள்.

மருத்துவர்களில் திறமையான மருத்துவத்தால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு எதிரான போரில் மருத்துவர்களின் பணி மகத்தானது. இதற்காக எங்கள் மருத்துவ சமூகத்திற்கு பாராட்டுகள்.

புதுச்சேரி வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் கடந்த 10 ஆண்டுகளாக மருத்துவ ஆராய்ச்சி பிரிவு செயல்பட்டு வருகிறது. பட்டதாரி மருத்துவர்கள், பல் மருத்துவர்கள் மருத்துவ மேல்படிப்பு மருத்துவர்கள் அந்தந்த துறையின் பேராசிரியர்களின் வழிகாட்டுதலின்படி இந்த ஆராய்ச்சி மையம் மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு ஊக்கமளித்து வருகிறது. நோய் கிருமிகள், மருந்து வகைகள் மற்றும் அறுவை சிகிச்சை சம்பந்தப்பட்ட ஆராய்ச்சி பட்டறைகளில் பங்கேற்று பல பாராட்டுக்களை பெற்றுள்ளனர். காலத்தின் தேவைக்கு ஏற்ப கொரோனா தொற்றை தடுக்க எங்கள் கல்லூரியில் தனி ஆராய்ச்சி கூடம் உருவாக்கப்பட்டு வருகிறது.

இப்போது மக்கள் மருத்துவமனைக்கு வரமுடியாத நிலை இருப்பதால் மாற்று ஏற்பாடாக டெலி மெடிசின் என்ற தொலைபேசி மூலம் எங்கள் மருத்துவர்கள், நோயின் தன்மைக்கு ஏற்ப இலவச மருத்துவ ஆலோசனைகள், மருந்துகளை பரிந்துரைப்பார்கள். 10 கி.மீ. தூரத்துக்குள் இருப்பவர்களுக்கு மருந்துக்கான கட்டணத்தை மட்டுமே வசூலித்து இலவசமாக டோர் டெலிவரி செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story