சாத்தான்குளம் சம்பவத்தில் கொலை வழக்கு பதிவு செய்யக்கோரி அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


சாத்தான்குளம் சம்பவத்தில் கொலை வழக்கு பதிவு செய்யக்கோரி அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 1 July 2020 12:24 AM GMT (Updated: 1 July 2020 12:24 AM GMT)

சாத்தான்குளம் சம்பவத்தில் போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்யக்கோரி பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி,

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழப்புக்கு காரணமான போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்யக்கோரி கோவில்பட்டியில் ஜீவா இல்லம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் அழகுமுத்து பாண்டியன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் சரோஜா, மாவட்ட நிர்வாக குழுவை சேர்ந்த பரமராஜ், நகர துணை செயலாளர் அலாவுதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், நகரில் மேலும் 3 இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பு தலைவர் தமிழரசன் தலைமை தாங்கினார். வக்கீல் பெஞ்சமின், 5-ம் தூண் அமைப்பு நிறுவனர் சங்கரலிங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி கதிரேசன், ஐ.என்.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் ராஜசேகர், ரத்ததான கழக ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நாம் தமிழர் கட்சி சார்பில், கோவில்பட்டியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தொகுதி செயலாளர் ராஜேசு கண்ணா தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட வக்கீல் பாசறை செயலாளர் ரவிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஏரல்

ஏரலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தாலுகா செயலாளர் அம்பிகா தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் கோபால், சிவமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாடசாமி தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் ஞானசேகர், ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட தலைவர் மணி, இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் சந்தனசேகர், கலை இலக்கிய பெருமன்ற மாவட்ட செயலாளர் கைலாசமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட பொருளாளர் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று தூத்துக்குடி தாளமுத்துநகரில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு அந்தோணி சவுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். கே.வி.கே.சாமி நகர் கிளை செயலாளர் அந்தோணிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஓட்டப்பிடாரம்

ஓட்டப்பிடாரம் அருகே குறுக்குச்சாலையில் சாத்தான்குளம் வியாபாரிகள் சாவுக்கு காரணமானவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை மீறி ஒப்பந்ததாரர்களுக்கு பணி உத்தரவு வழங்கக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றியக்குழு உறுப்பினர் கணேச மூர்த்தி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் அழகு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். ஒன்றிய துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story