காங்கேயம் அருகே லாரி மோதி ஆயுதப்படை போலீஸ்காரர் சாவு; டிரைவர் கைது


காங்கேயம் அருகே லாரி மோதி ஆயுதப்படை போலீஸ்காரர் சாவு; டிரைவர் கைது
x
தினத்தந்தி 1 July 2020 12:56 AM GMT (Updated: 1 July 2020 12:56 AM GMT)

காங்கேயம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது லாரி மோதி ஆயுதப்படை போலீஸ்காரர் உயிரிழந்தார். இது தொடர்பாக லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

முத்தூர்,

திருப்பூர் மாவட்டம் காங்கேயம்-சென்னிமலை சாலையில் உள்ள திட்டுப்பாறை நொய்யல் ஆற்றுப்பாலம் சோதனை சாவடியில் நேற்று முன்தினம் இரவு போலீசார் மற்றும் கொரோனா தடுப்பு அதிகாரிகள் குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரவு 11 மணிக்கு சென்னிமலையில் இருந்து ஒரு கன்டெய்னர் லாரி வேகமாக வந்தது.

இந்த லாரி நொய்யல் ஆற்றுப்பாலத்தின் மறுபுறமும் அமைக்கப்பட்டுள்ள ஈரோடு மாவட்டம் சென்னிமலை போலீஸ் சோதனை சாவடியில் நிற்காமல் சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பிகள் மீது மோதி தூக்கி வீசி விட்டு மறுபுறம் வந்தது. மேலும் இந்த பகுதியில் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் போலீசாரின் சோதனை சாவடியில் தடுப்புக்காக வைக்கப்பட்டிருந்த கம்பிகள் மீதும் மோதிவிட்டு நிற்காமல் வேகமாக சென்றது.

இதனால் அந்த சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த திருப்பூர் ஆயுதப்படை போலீஸ்காரரான பிரபு (வயது 23) என்பவர் உடனடியாக தனது மோட்டார் சைக்கிளில் அந்த லாரியை துரத்தி சென்றார். பின்னர் ஆயுதப்படை போலீஸ்காரர் வேகமாக சென்று சாவடி பஸ் நிறுத்தம் அருகே அந்த லாரியை முந்தி செல்ல முயன்றார்.

அப்போது லாரி மோதியதில் பிரபு தலையில் பலத்த அடிபட்டு உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். ஆனாலும் அந்த லாரி நிற்காமல் சென்றதால் உயிரிழந்த பிரபுவின் உடலையும் சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு இழுத்து கொண்டு சென்றது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் திருப்பூர், ஈரோடு மாவட்ட போலீசார் அதிர்ச்சியடைந்து உடனடியாக அந்த லாரியை பிடிக்க துரித நடவடிக்கை மேற்கொண்டனர். இதன்படி லாரி பற்றிய தகவல் வாக்கிடாக்கி மூலம் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் லாரி சென்ற திசையை கண்காணிப்பு கேமராவில் கண்டறிந்து லாரியை வேகமாக துரத்தி சென்றனர்.

அறச்சலூர் வடபழனி அருகே சென்ற அந்த லாரி சிவகிரி செல்லும் உள் சாலையில் வேகமாக சென்றது. இதனை தொடர்ந்து இதன் பின்னே துரத்தி சென்ற ஈரோடு மாவட்ட போலீசார் ஓடாநிலை பஸ் நிறுத்தம் அருகில் அந்த லாரியை மடக்கி பிடித்தனர்.

தொடர்ந்து லாரியில் இருந்த டிரைவரை கீழே இறக்கி விசாரித்ததில் அவர் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா, விளத்தூர் பகுதியை சேர்ந்த பாஸ்கரன் (40) என தெரிய வந்தது. மேலும் இவர் குடிபோதையில் இருந்ததால் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றதும் விசாரணையில் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் கோவை மேற்கு மண்டல ஐ.ஜி.பெரியய்யா, கோவை சரக டி.ஐ.ஜி. கார்த்திகேயன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர். பின்னர் உயிரிழந்த பிரபுவின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இந்த சம்பவம் காங்கேயம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story