வேதாரண்யம் அருகே கடற்கரையில் ஒதுங்கிய 12 கிலோ கஞ்சாவை காயவைத்த 4 பேர் கைது


வேதாரண்யம் அருகே கடற்கரையில் ஒதுங்கிய 12 கிலோ கஞ்சாவை காயவைத்த 4 பேர் கைது
x
தினத்தந்தி 1 July 2020 2:32 AM GMT (Updated: 1 July 2020 2:32 AM GMT)

வேதாரண்யம் அருகே கடற்கரையில் ஒதுங்கிய 12 கிலோ கஞ்சாவை காயவைத்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா பகுதிகளான கோடியக்கரை, மணியன் தீவு, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வேட்டைக்காரனிருப்பு உள்ளிட்ட பகுதிகள் வழியாக படகில் இலங்கைக்கு அடிக்கடி கஞ்சா கடத்தப்படுகிறது. இலங்கையில் இருந்து இந்த பகுதி வழியாக தங்கம் கடத்தி வரப்படுவதும் தொடர்ந்து நடக்கிறது.

உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களும், தங்கமும் நாகை மாவட்ட கடல் பரப்பு வழியாக கடத்தி வரப்படுகிறது. கடத்தல்காரர்களை பிடிக்க கடலோர காவல் குழும போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையின் மேற்கு பகுதியில் உள்ள கடற்கரையில் சதுப்பு நில பகுதியில் கஞ்சா பொட்டலங்கள் கிடப்பதாக வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வேதாரண்யம் கடலோர காவல் குழும துணை போலீஸ் சூப்பிரண்டு குமார், இன்ஸ்பெக்டர் ஜோதி முத்துராமலிங்கம் மற்றும் போலீசார் கோடியக்கரையில் இருந்து படகில் சதுப்பு நில பகுதிக்கு சென்று அங்கு கிடந்த கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றினர்.

அப்போது 42 கஞ்சா பொட்டலங்கள் இருப்பதும், அவை 80 கிலோ எடை இருந்ததும் தெரிய வந்தது. இந்த கஞ்சா பொட்டலங்கள் கோடியக்கரையில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்தி செல்லும்போது கடலில் தவறி விழுந்து கரை ஒதுங்கியதா? அந்த கஞ்சா பொட்டலங்களை கடத்தி வந்தவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தல்காரர்களை வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயசுந்தரம் மற்றும் தனிப்படை போலீசார் ஆகியோருக்கு நேற்று கோடியக்கரை அருகே கஞ்சா பொட்டலங்கள் கிடப்பதாக தகவல் கிடைத்தது. தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது கோடியக்கரை காட்டு பகுதியில் கஞ்சாவை காய வைத்து கொண்டிருந்த 4 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், கோடியக்காட்டை சேர்ந்த செல்வம் (வயது 28), அய்யப்பன்(34), சிவானந்த் (37), கார்த்திக்(25) ஆகியோர் என்பதும், அவர்கள் கடந்த 18-ந்தேதி கோடியக்கரையில் கரை ஒதுங்கிய கஞ்சா பொட்டலங்களில் 6 பொட்டலங்களை எடுத்து காயவைத்து கொண்டிருந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்த 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய மற்றவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story